ஹேமாவிடம் சான்ஸ் கேட்கும் லாலு!
முன்னாள் கனவுக் கன்னியும், இந்நாள் ராஜ்யசபா எம்.பியுமான ஹேமமாலினி தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க தனக்கு ஒரு சான்ஸ் தருமாறு ஹேமாவிடம் கேட்டுள்ளாராம் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ்.
இந்திய அரசியல்வாதிகளில் படு வித்தியாசமானவர் லாலு பிரசாத் யாதவ். அவரது லீலைகளை இந்த நாடறியும். இப்போது அவற்றைக் குறைத்துக் கொண்டு விட்டார். ஆனால் முன்பு அவர் செய்த லூட்டிகள் இந்தியாவையேக் கலக்கின.சமீபத்தில் கூட வெள்ள பாதிப்பை பார்வையிட ஹெலிகாப்டரில் போன லாலு நடு ரோட்டில் ஹெலிகாப்டரை இறக்கி கலங்கடித்தார்.
இந்த நிலையில் நடிப்பு ஆசை வந்து விட்டது லாலுவுக்கு. இதை இன்று துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் ஓட்டுப் போடுவதற்காக ராஜ்யசபாவுக்கு வந்தபோது அவரே தெரிவித்தார்.
ஓட்டுப் போட்டு முடித்த பின்னர் லாலு செய்தியாளர்களிடம் கூறுகையில், ஹேமமாலினி ஒரு படம் தயாரிக்கிறார். அதில் எனக்கும் ஒரு சான்ஸ் கொடுங்கள் என்று கேட்டுள்ளேன். கொடுப்பார் என்று நம்புகிறேன் என்றார் லாலு.
படத்தின் பெயர் என்ன லாலுஜி என்று கேட்டபோது, அது பரம ரகசியம் என்றார் தனக்கே உரிய புன்னகையோடு.
முன்பு பீகார் முதல்வராக லாலு இருந்தபோது, பாட்னா நகர சாலைகளை ஹேமமாலினியின் கன்னங்களைப் போல பளபளவென மாற்றுகிறேன் என்று கூறியது நினைவிருக்கலாம்.
ஆனால் பாட்னா நகர சாலைகள் இன்னும் டொங்கு விழுந்த நிலையில்தான் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











