மீண்டும் வருமா உன் ஆனந்த யாழ்? நா.முத்துக்குமார் பிறந்த நாள்!
"கவிஞனும் காற்றும் மரித்ததாய் ஏது சரித்திரம்!" இது பாரதியாரைப் புகழ கவிப்பேரரசு வைரமுத்து பயன்படுத்திய வரிகள்! பார்வைகளை பரவவிட்டு, பார்போற்றும் கவிஞனாய் விழுமியங்களை விஸ்தாரப்படுத்திச் சென்ற நா.முத்துக்குமாருக்கு இது ஏன் பொருந்தாது? நிச்சயம் பொருந்தும்!
நா.முத்துக்குமார் என்ற பெயரில் தந்தைபெயரின் முதலெழுத்தாக "நா" அடங்கி இருப்பதாலோ என்னவோ, இவருக்கு ஒரு நாவடக்கமான கவிஞர் என்ற பெயருண்டு. நாவடக்கம் ஞானச் செறுக்கிலும் உண்டு என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவருக்கு இன்று 43-வது பிறந்தநாள்!

பொய்
கண்ணுக்கு மையழகு கவிதைக்கு பொய்யழகு என்று வைரமுத்து ஒரு பாடல் எழுதியிருப்பார். கவிதைக்கு பொய்தான் அழகா என்று அவரிடம் கேட்கபட்டதற்கு கவிஞன் நினைத்தால் கவிதையை அழகாக்க பொய்யாகவும் தைக்கலாம் என்று பதில் சொன்னாராம். ஆனால் எப்போதும் தன்னுடைய கவிதையில் பொய் இல்லாமல் பார்த்துக்கொண்ட கவிஞன் நா.முத்துக்குமார்.

நேர்த்தி
நடுத்தர வர்க்கத்து இளைஞனின் நகர வாழ்க்கையை இவ்வாறு குறிப்பிடுகிறார்...
" அடுக்குமாடி குடியிருப்பின் மொட்டைமாடியில் நிலா இருக்கிறது, சோறும் இருக்கிறது...
ஊட்டுவதற்குதான் தாய் இல்லை"
அந்த கவிதை எழுதியபோது அவரின் தாயை இழந்திருந்தார் என்பது அவரின் உண்மையான உணர்வுக்கு எடுத்துக்காட்டு.

அறிமுகம்
ஜூலை 12 ஆம் நாள் காஞ்சியில் பிறந்த நா.முத்துக்குமார் 24 வது அகவையில் திரைத்துரைக்கு வந்துவிட்டார். எளிய மனிதனால்தான் எளிய மனிதனின் இலக்கியத்தை எழுத முடியும் என்ற சொல்லாடலுக்கு சொந்தக்காரர் இந்த முத்துக்குமார்.

கூட்டணி
எத்தனையோ இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியிருந்தாலும், யுவன் ஷங்கர் ராஜாவுடன் கைகோர்க்க தொடங்கிய பிறகு அதிர்ஷ்டம் இவரிடம் அகப்பட்டுக்கொண்டது என்றே சொல்லலாம். திரும்பிய இடமெல்லாம், விருதுகளும் வெற்றிகளும் குவிந்தன.

தொடர்பு
"ஒரு கல் ஒரு கண்ணாடி உடையாமல் மோதிக்கொண்டால் காதல்" என சமகாலக் காதலை இவ்வளவு எளிதாக யாரும் சொன்னதில்லை.
கிரீடம் திரைப்படத்தில் வரும் "அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும்..."
"விழியில் விழியில் வந்து விழுந்தேன் அந்த நொடியில்..." ஆகிய பாடல்கள் பேச்சு வழக்கில் பயன்படுத்தும் வார்த்தைகளுக்கு கவிச்சாரம் ஊட்டப்பட்ட பாடல்கள்.
சாதாரணை இளைஞனுக்கு அழகான காதலி கிடைக்கும்போது ஏற்படும் விவரிக்க முடியாத அவனின் உணர்வை.. மின்னல்கள் கூத்தாடும் மழைக்காலம் வீதியில் எங்கெங்கும் குடைக்கோலம், என் முன்னே நீ வந்தாய் கொஞ்ச நேரம் என்று பொல்லாதவன் திரைப்படத்தில் தொடர்பு படுத்தி எழுதியிருப்பார்

எளிமை
மதராசப்பட்டினம் படத்தில் வரும், பூக்கள் பூக்கும் தருணம் பாடலில் "
பாதை முடிந்த பிறகும் இந்த உலகில் பயணம் முடிவதில்லையே...
"காற்றில் பறந்தே பறவை மறைந்த பிறகும் இலை தொடங்கும் நடனம் முடிவதில்லையே..."
என்ற வரிகள் போலவே அவரின் நினைவுகளும், பாடல்களும் நம்மோடு காலம் கடந்து பயணிக்கும்.

கவனம்
வாழ்க்கை பற்றிய ஒரு கவிதையில்,
" கடவுளுடன் சீட்டாடுவது கொஞ்சம் கடினமானது
எவ்வளவு கவனமாக இருந்தாலும் பார்க்காமலேயே அறிந்துகொள்கிறார்" எனும்போது அவரின் குறும்புத்தனம் வெளிப்படும்.

அற்புதம்
தன் மகனுக்கான கடிதத்தில் " மகன் பிறந்த பிறகுதான் அப்பாவின் பாசத்தை அறிந்துகொள்ள முடிந்தது என் அன்பு மகனே உன் மகன் பிறந்ததும் என்னை நீ அறிவாய்" என்று தந்தை மகன் உறவின் அற்புதத்தை குறிப்பிடுகிறார்.

ஆனந்த யாழை
தங்கமீன்கள் திரைப்படத்தில் வரும் "ஆனந்த யாழை மீட்டுகிறாய்"... பாடல் மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கே உரித்தான உணர்வு.

பிரிவு
சயிப் அலிகான் நடித்த ரேஸ் திரைப்படத்தில் ஒரு வசனம் வரும், கடவுளுக்கு கெட்டவர்களை பிடிக்காது நாம் சாகமாட்டோம் என்று ஜான் ஆப்ரகாம் சொல்வார். அதனால் தான் என்னவோ இத்தனை நல்ல மனிதரான நா.முத்துக்குமாரை சீக்கிரமாக மரணம் தழுவிக்கொண்டது போலும். பிறந்த நாள் வாழ்த்துக்கள்... நா.முத்துகுமார்!


Click it and Unblock the Notifications