ஆட்டமாய் ஆடும் மாதுரி தீக்சித்

ஒரு காலத்தில், ஓவிய மேதை எம்.எப். உசேன் உள்பட லட்சக்கணக்கான இந்திய ரசிகர்களை பைத்தியம் பிடிக்க வைத்தவர் மாதுரி தீக்சித். அவரது இடுப்பசைவு ஆட்டத்திற்காகவே ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தனர்.
நடனத்தில் மட்டுமல்லாது நடிப்பிலும் அசத்தியவர் மாதுரி தீக்சித். சில ஆண்டுகளுக்கு முன்பு கல்யாணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலாகி விட்டார் மாதுரி. அதன் பின்னர் வந்த தேவதைகள் பாலிவுட்டை அலங்கரித்து ஆக்கிரமித்துக் கொண்டாலும், மாதுரி மீதான கிரேஸ் இன்னும் கூட குறையாமல் அவருக்கான ரசிகர்கள் இருக்கவே செய்கிறார்கள்.
இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகிவிட்ட மாதுரி தனது 42வது வயதில் மீண்டும் கேமரா முன் நிற்க மும்பை வந்தார். சமீபத்தில் அவர் ஒத்தை பாட்டுக்கு போட்ட ஆட்டம் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துவிட அவரை ஸ்டார் பிளஸ் டிவிக்காரர்கள் வளைத்துப் போட்டுவிட்டனர்.
அதில் ஒளிபரப்பாகி வரும் நாச் பாலியே 3 (அதாவது நம்ம விஜய் டிவியில் கலக்கிக் கொண்டிருக்கும் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியின் ஒரிஜினல்) நிகழ்ச்சியில் மாதுரி தீக்சித் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்கிறார். அத்தோடு ஜோடிகளோடு சேர்ந்து அவரும் ஆடப் போகிறார்.
ஆஜா நாச்லே என்ற பாட்டுக்கு மாதுரி நடனம் ஆடவுள்ளாராம். நாளை ஒளிபரப்பாகும் இந்த எபிசோட் முழுவதும் யாஷ் ராஜ் சூப்பர் ஹிட் பாடல்கள் இடம் பெறுகிறதாம்.
இதில் கலந்து கொள்ளும் ஜோடிகளை ஊக்குவிக்க பாலிவுட் ஸ்டார்களான குணால் கபூர், கொன்கனா சென் சர்மா ஆகியோரும் பங்கேற்கின்றனர். கூடவே மாதுரியும் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்.
கொன்கனா சென் சர்மாவும், குணால் கபூரும் ஜோடிகளுக்கு மார்க் போடவுள்ளனர். ஜோடிகளின் ஆட்டத்திற்குப் பின்னர் கடைசியாக மாதுரி தீக்சித்தின் ஆட்டம் இடம் பெறுமாம். மேலும் இந்தச் சுற்றில் வெற்றி பெறும் ஜோடியின் பெயரையும் மாதுரி அறிவிப்பாராம்.
எந்தத் திரையாக இருந்தால் என்ன, மாதுரி ஆடினால் அது அட்டகாசமாகத்தான் இருக்கும்.


Click it and Unblock the Notifications











