சிவாஜி வர தாமதம்-மலேசியாவில் ரசிகர்கள் அமளி
மலேசியாவில் சிவாஜி படம் திரையிடுவதில் தாமதம் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த தமிழ் ரசிகர்கள் பெரும் ரகளையில் இறங்கினர். இதில் 10க்கும் மேற்பட்ட தியேட்டர்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள சிவாஜி உலகெங்கும் நேற்று முன்தினம் ரிலீஸ் ஆனது. மலேசியாவிலும் 10க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இப்படம் திரையிடப்பட்டது. மலேசியாவுக்கு மொத்தம் 53 பிரிண்டுகள் அனுப்பப்பட்டன. ஆனால் 42 பிரிண்டுகள் மட்டுமே வந்து சேர்ந்ததாம்.இதன் காரணமாக 10க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் படத்தை குறித்த நேரத்தில் திரையிட முடியவில்லை. இதனால் காத்துக் கிடந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களும் கடுப்பாகி விட்டனர்.
இந்த நிலையில் சில தியேட்டர்களில் படம் இன்று திரையிடப்படாது என்று அறிவிப்பு வரவே ஆத்திரத்தின் உச்சிக்கேப் போய் விட்டனர் ரஜினியின் ரசிகர்கள்.
பல மணி நேரமாக காத்துக் கிடந்தும் படம் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதாலும், ரத்து செய்யப்பட்டதாலும் கோபமடைந்த ரசிகர்கள் ரகளையில் குதித்தனர். தியேட்டர் டிக்கெட் கவுண்டர் உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்கினர்.
கோலாலம்பூர் அருகே உள்ள கிளாங் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ இண்டன் என்ற தியேட்டரில் டிக்கெட் கவுண்டருக்கு தீவைக்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
முதல் நாள் இப்படி அமளியாகி விட்ட நிலையில் நேற்று படம் திரையிடுவதில் தாமதம் ஏற்பட்ட தியேட்டர்களில் சிவாஜி திரையிடப்பட்டது. ரசிகர்கள் பெரும் சந்தோஷத்துடன் படத்தைப் பார்த்து மகிழ்ந்தனர்.
இபோ நகரில் தியேட்டர் மேலாளருக்கு அடி உதை விழுந்தது. அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து பல ரசிகர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், ரசிகர்களுக்கு ஏற்பட்ட அசவுகரியத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ளார் மலேசியாவுக்கான சிவாஜி விநியோகஸ்தர் வேல் பாரி. இதுகுறித்து அவர் கூறுகையில், சென்னையிலிருந்து பிரிண்டுகள் வருவதில் ஏற்பட்ட தாமதத்தால்தான் இந்தக் குழப்பம் நடந்து விட்டது. தற்போது பிரச்சினை சரியாகி விட்டதாக கூறினார் வேல் பாரி.


Click it and Unblock the Notifications











