எஸ்பிபி மருத்துவமனையில் இருந்தபோது.. அது ஒன்று போதாதா எங்கள் நட்பின் சாட்சிக்கு.. இளையராஜா உருக்கம்!
சென்னை: பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியத்தின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இசையமைப்பாளர் இளையராஜா உருக்கமாக அவரது நினைவுகளை பகிர்ந்துள்ளார்.
எஸ்பிபியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர் இளையராஜா. அவர்களின் நட்பு திரைத்துறையில் ஆரம்பக்காலத்திலிருந்து செழித்து வளர்ந்த ஒன்று.
இளையராஜாவின் இசையில் நூற்றுக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார் எஸ்பிபி. இளையராஜாவின் இசையில் பாடும் நிலா எஸ்பிபியின் குரலில் உருவான பல பாடல்கள் இன்றும் பலருக்கு மன அமைதிக்கான மருந்தாக உள்ளது.

எஸ்பிபி மருத்துவமனையில் இருந்த போது
இருவருக்கும் இடையே சில மனஸ்தாபங்கள் இருந்த போதும் ஒருவரை ஒருவர் எங்கேயும் விட்டுக்கொடுத்ததே இல்லை. எஸ்பி பாலசுப்பிரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது கூட தனது நண்பருக்காக உருக்கமான வீடியோவை வெளியிட்டிருந்தார் இளையராஜா.

பாலு சீக்கிரம் எழுந்து வா...
அந்த வீடியோவில் பாலு சீக்கிரம் எழுந்து வா.. நான் உனக்காக காத்திருக்கிறேன் என உருக்கமாக பேசி வீடியோ வெளியிட்டிருந்தார். அவர் பேசிய வீடியோ பலரையும் கலங்க வைத்தது. இதன் தொடர்ச்சியாக எஸ்பிபி நலம் பெறவேண்டி கூட்டுப் பிரார்த்தனையும் நடைபெற்றது.

இளையராஜா வீடியோவை காட்டிய மகன்
இதன் பலனாக அடுத்த சில நாட்களில் எஸ்பிபியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. லவ் யூ ஆல் என எழுதும் அளவுக்கும் அவரது உடல் நிலை முன்னேற்றமடைந்தது. அப்போது எஸ்பிபியின் மகன் எஸ்பி சரண், இளையராஜா உருக்கமாக பேசிய வீடியோவை தனது போனில் எஸ்பிபியிடம் காட்டியுள்ளார்.

கண்கள் கலங்கி இளையராஜாவுக்கு முத்தம்
அதனை பார்த்த எஸ்பிபி கண்கள் கலங்கி போனை அருகில் கொண்டு வரச்சொல்லி அதில் இருந்த இளையராஜாவுக்கு முத்தமிட்டார். இதனை எஸ்பிபியின் மறைவுக்கு பிறகு அவர் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனை மருத்துவர் தெரிவித்து நெகிழச் செய்தார்.

இந்த துக்கத்துக்கு அளவே இல்லை
எஸ்பிபி மரணமடைந்த போதும் கூட இளையராஜா வீடியோ வெளியிட்டிருந்தார். சீக்கிரம் வா என்றேன் நீ கேட்கவில்லை, எங்க போன பாலு.. இங்க உலகமே சூனியமாயிடுச்சு.. பேச பேச்சு இல்லை.. சொல்ல வார்தையில்லை.. எல்லா துக்கத்துக்கும் அளவுண்டு.. இதுக்கு அளவே இல்லை என கூறி ஸ்தம்பித்து போனார் இளையராஜா.

எஸ்பிபிக்காக மோட்ச தீபம்
மேலும் எஸ்பிபிக்காக அவர் மரணித்த அடுத்த நாளே திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு சென்று அவருக்காக மோட்ச தீபம் ஏற்றினார் இளையராஜா. இந்நிலையில் இன்று எஸ்பிபியின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவர் குறித்து தனது நினைவுகளை உருக்கமாக பகிர்ந்துள்ளார் இளையராஜா.

அந்த ஒன்று போதாதா எங்கள் நட்பின் சாட்சிக்கு?
பாலசுப்ரமணியத்தின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்க வளாகத்தில் இன்று நடைபெற்றது. இதில்தான் எஸ்பிபி குறித்து உருக்கமாக பேசியுள்ளார் இளையராஜா. அதாவது, "எஸ்பிபி மருத்துவமனையில் இருந்தபோது யாரையாவது பார்க்க வேண்டுமா என கேட்டதற்கு, ராஜாவை வர சொன்னதாக அறிந்தேன். அந்த ஒன்று போதாதா எங்கள் நட்பின் சாட்சிக்கு" என்று கூறியுள்ளார்.

ஒவ்வொரு பாடலிலும் இருவரும் இருப்போம்
மேலும் எங்கள் இருவர் உழைப்பால்தான் மக்கள் பாடல்களை கேட்க முடிகிறது; ஒவ்வொரு பாடலிலும் இருவரும் இருப்போம் என்றும் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் இளையராஜா. எஸ்பிபி இளையராஜாவின் இசையில்தான் அதிக பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











