'மிருகம்' நடத்திய உண்ணாவிரதம்

மிருகம் படத்தில் இடம் பெற்றிருந்த ஜல்லிக்கட்டு காட்சிக்கு பிராணிகள் நல வாரியம் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து அந்தக் காட்சியை கட் செய்து விடுமாறு சென்சார் போர்டு உத்தரவிட்டது. வேறு வழியில்லாமல் மிருகம் படத்திலிருந்து அந்தக் காட்சியை இயக்குநர் சாமி நீக்க வேண்டியதாயிற்று.
பிராணிகள் நல வாரியத்தின் இந்த செயலுக்கு மிருகம் படத் தயாரிப்பாளர் கார்த்திக் ஜெய் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். படத்தில் இடம் பெற்ற காளைகளுக்கு எந்தவித இடைஞ்சலும் தராமல் அக்காட்சியைப் படமாக்கினோம். ஆனால் அதை நீக்க உத்தரவிட்டது நியாயமற்ற செயல் என்று அவர் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இதைக் கண்டித்து பிராணிகள் நல வாரிய அலுவலகம் நோக்கி கோவணத்துடனும், ஜல்லிக்கட்டுக் காளைகளுடனும் ஊர்வலமாகப் போகப் போவதாக அவர் அதிரடியாக அறிவித்தார்.
ஆனால் இப்போராட்டத்திற்கு போலீஸார் அனுமதி தரவில்லை. இதையடுத்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி சென்னை சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் இல்லம் எதிரே, இன்று காலை தயாரிப்பாளர் கார்த்திக் ஜெய், இயக்குநர் சாமி, நாயகன் ஆதி மற்றும் படக்குழுவினர் உள்ளிட்டோர் கலந்து கொண்ட உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
அப்போது கார்த்திக் ஜெய் கூறுகையில், எங்களது படத்திலிருந்து மட்டும் ஜல்லிக்கட்டு காட்சியை நீக்கியதைக் கண்டித்து இந்தப் போராட்டத்ைத நாங்கள் நடத்தவில்லை. இனி வரும் படங்களிலும் இதுபோன்ற காட்சிகளை சேர்க்க அனுமதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே இப்போராட்டத்தை நடத்துகிறோம்.
ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக் கலை. ஊரக மக்களின் வீரத்தின் அடையாளம். அதை படத்தில் காட்டுவது என்பது தவறு கிடையாது, குற்றம் கிடையாது. இதன் மூலம் இந்த வீரக் கலையை பிரபலப்படுத்த முடியும் என்றார்.


Click it and Unblock the Notifications











