அமிதாப்புடன் 'மிஸ் ஸ்ரீலங்கா'!

அலாவுதீனும் அற்புத விளக்கும் கதை அனைவருக்கும் தெரிந்திருக்கும். இந்தக் கதையை மையமாக வைத்து ரஜினி, கமல் நடிக்க அந்தக் காலத்திலேயே ஒரு படம் வந்தது. பிறகு பட்டணத்தில் பூதம் என்ற பெயரிலும் இந்தப் பூதக் கதை படமாக வந்தது.
இப்போது இதே கதையை இந்தியில் படமாக்கப் போகிறார்கள். படத்திற்கு அலாவுதீன் என்று பெயரிட்டுள்ளனர். ரிதீஷ் தேஷ்முக் அலாவுதீனாக நடிக்கிறார். அமிதாப் பச்சன்தான் பூதம் வேடத்தில் நடிக்கப் போகிறார். சஞ்சய் தத்தும் படத்தில் இருக்கிறார். அவருக்கு முக்கியமான கேரக்டராம்.
நாயகியாக ஜாக்குலின் பெர்னாண்டஸ் நடிக்கவுள்ளார். இவர் லோக்கல் அல்ல, இலங்கையைச் சேர்ந்தவர். கடந்த ஆண்டு மிஸ்.ஸ்ரீலங்கா பட்டம் வென்றவர். அட்டகாசமான அழகுடன் உள்ள ஜாக்குலின், பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதி வருபவர்.
தன்னைத் தேடி வந்த பல பட வாய்ப்புகளை வேண்டாம் என்று சொன்ன ஜாக்குலின் அலாவுதீன் படத்தை மட்டும் ஒத்துக் கொண்டதற்கு அமிதாப் பச்சன்தான் காரணம். அதாவது அமிதாப்பின் தீவிர ரசிகையாம் ஜாக்குலின். இதனால்தான் அலாவுதீன் படத்தை ஒத்துக் கொண்டாராம் ஜாக்குலின்.
இப்படத்தில் சொந்தக் குரலில் பேசி நடிக்கப் போகிறாராம் ஜாக்குலின். இதற்காக இந்தி கற்றுக் கொண்டு வருகிறாராம்.
சிங்களத்து சின்னக் குயில்கள் பல தென்னிந்தியத் திரைவானில் கொடி கட்டப் பறந்துள்ளன. முதன் முதலாக ஒரு குயில், பாலிவுட் பக்கம் பறந்து வந்துள்ளது.
மிஸ்.ஸ்ரீலங்கா ஜாக்குலினுக்கு உடல் அழகு மீது அதிக நம்பிக்கை இல்லையாம். மனிதாபிமானம்தான் உண்மையான அழகு என்கிறார் ஜாக்குலின். உடல் அழகு எல்லாம் குறுகிய காலத்திற்குத்தான். ஆனால் மனிதாபிமானம், அடுத்தவருக்கு உதவுவது என்பது காலத்திற்கும் அழியாதது, அதுதான் உண்மையான அழகு என்கிறார் ஜாக்குலின்.
அழகுப் பெண் ஜாக்குலின் இலங்கையைச் சேர்ந்தவராக இருந்தாலும், பிறந்து வளர்ந்தது எல்லாம் பஹ்ரைனாம். குதிரை ஏற்றத்தில் சூப்பராக கலக்குவாராம். சமையல் நன்றாக செய்வாராம். ஆங்கில ஆசிரியையாக தற்போது பணியாற்றி வரும் ஜாக்குலின் அலாவுதீனை மட்டும்தான் ஒப்புக் கொண்டிருக்கிறாராம். தொடர்ந்து நடிக்கும் எண்ணம் இப்போதைக்கு இல்லையாம்.


Click it and Unblock the Notifications











