மோனிகாவுக்கு கட்டுப்பாடு நீக்கம்
| Click here for more images |
இந்தியா முழுவதும் எங்கு வேண்டுமானாலும் சுதந்திரமாக செல்லலாம் என்று நடிகை மோனிகா பேடிக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
தாதா அபு சலீமின் முன்னாள் மனைவியான மோனிகா பேடி, கடந்த 2005ம் ஆண்டு, போர்ச்சுகல் நாட்டிலிருந்து சலீமுடன் சேர்த்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.
இருவரும் இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டவுடன் அவர்கள் மீதான வழக்குகள் தூசி தட்டி எடுக்கப்பட்டன. மோனிகா பேடி மீது போபால் மற்றும் ஹைதராபாத்தில் பாஸ்போர்ட் மோசடி வழக்குகள் விசாரணைக்கு வந்தன.
இதில் போபால் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கிலிருந்து அவர் விடுதலை செய்யப்பட்டு விட்டார். ஹைதராபாத் நீதிமன்றம் மோனிகாவுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து ஆந்திர உயர்நீதிமன்றத்தில் மோனிகா அப்பீல் செய்தார்.
இந்த அப்பீலை விசாரித்த உயர்நீதிமன்றம் தண்டனையை 3 ஆண்டுகளாக குறைத்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மோனிகா அப்பீல் செய்துள்ளார். மேலும் உச்சநீதிமன்றம் மூலம் ஜாமீன் பெற்று விடுதலையாகியுள்ளார்.
மோனிகாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டபோது அவர் பஞ்சாப் மாநிலத்திலேயே தங்கியிருக்க வேண்டும். வேறு எங்கும் செல்லக் கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டது.
இந்த நிபந்தனையைத் தளர்த்த வேண்டும், தான் படப்பிடிப்புக்காக நாட்டின் எந்தப் பகுதிக்கும் செல்ல அனமதிக்க வேண்டும் என்று கோரி மோனிகா பேடி உச்சநீதிமன்றத்தை அணுகியிருந்தார்.
இந்த மனுவை தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதி ரவீந்திரன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று விசாரித்தது.
விசாரணைக்குப் பின்னர், பஞ்சாபை விட்டு மோனிகா வெளியேறக் கூடாது என்று முன்பு விதிக்கப்பட்ட நிபந்தனையை நீதிபதிகள் ரத்து செய்து உத்தரவிட்டனர்.
மேலும், பஞ்சாபை விட்டு இந்தியாவின் எந்தப் பகுதிக்கும் மோனிகா செல்லலாம். இதற்காக காவல்துறையிடம் முன அனுமதி பெறத் தேவையில்லை என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Click it and Unblock the Notifications











