நெஞ்சம் மறப்பதில்லை- 5: 'கொடை வள்ளல்' கலைவாணர் என்.எஸ்.கே!
-பெரு துளசிபழனிவேல்
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் கதாநாயகனாகவும், காமெடி நடிகராகவும் நடித்து பேரும், புகழும் பெற்று, பொருளாதாரத்திலும் ‘ஒஹோ' வென்று உயர்ந்து நின்ற திரையுலகத்தின் பொற்காலம்.
நிறைய திரைப்படங்களில் நடித்து கொண்டிருந்தார். வருமானமும் அதிகமாக வந்துக் கொண்டிருந்தது. இந்தச் சூழ்நிலையில் தன்னைத் தேடிவந்து நலிந்த நாடக கலைஞர்கள், ஏழ்மை நிலையில் உள்ள சாதாரண மக்கள் உதவி கேட்கும்போது அவர்களுக்கு இல்லை என்று சொல்வதில்லை.
அவர்களை வயிறு நிறைய சாப்பிட வைத்து அதன்பிறகு கேட்டு வந்த உதவியையும் செய்து அனுப்புவார். இதனால் வருமான வரித்துறைக்கு தனது வருமானத்தைப் பற்றி கணக்குக் காட்டும்போது ஏழைக்கு உதவியது, கல்யாணத்திற்காக கொடுத்தது, படிப்புக்கு கொடுத்தது என்றுதான் செய்து வந்த உதவிகளை அதில் தெரிவித்திருந்தார்.

ஒருநாள் வருமானத்துறைக்கு என்.எஸ். கிருஷ்ணனின் உதவியாளர் கணக்குகளை ஒப்படைக்க கொண்டு போனார். கணக்குகளை வருமானவரித் துறை அதிகாரிக்கு படித்துக் காட்டினார். அப்பொழுது மற்றவர்களுக்கு உதவி செய்ததையும், பணம் கொடுத்ததையும் படித்து காட்டுகிறார்.
'என்ன இந்த கிருஷ்ணனின் கணக்கில் எப்பொழுது பார்த்தாலும் அவனுக்கு உதவி செய்தேன், இவனுக்கு உதவி செய்தேன் என்று கணக்கு காட்டுகிறார்கள். ஒரு வேளை வந்த வருமானத்தை மறைத்து பொய் கணக்கு காட்டுகிறார்களோ? மற்றவர்களுக்கு இந்த கிருஷ்ணன் உண்மையில் உதவி செய்பவர்தானா?' என்பதைக் கண்டறிய வருமானவரித் துறை அதிகாரி கணக்கு கொடுக்க வந்த உதவியாளரிடம், "தம்பி கொஞ்சம் நேரம் இருங்க ஒரு வேலை இருக்கு அதை முடித்துவிட்டு வந்து உன் கணக்கைச் சரி பார்க்கிறேன்," என்று கதவைச் சாத்திவிட்டு வெளியே கிளம்புகிறார்.
வீதியில் வந்து நின்ற அந்த அதிகாரி வழியே போன குதிரை வண்டியை மடக்கி ஏறிக் கொள்கிறார். (அப்பொழுதெல்லாம் குதிரை வண்டி பயணம்தான்) நடிகர் என்.எஸ்.கிருஷ்ணன் வீட்டுக்குப் போங்க என்று குதிரை வண்டிக்காரனிடம் வழி சொல்கிறார். குதிரை வண்டியும் வேகமாக வந்து கலைவாணரின் வீட்டுமுன் வந்து நிற்கிறது. வண்டியில் வந்திறங்குபவரை வாசல் திண்மையில் அமர்ந்திருந்த கலைவாணர், வந்திருப்பவர் யாரென்று கூடத் தெரியாமல் எழுந்து வந்து "வாங்க, வாங்க... என்ன விஷயமா என்னைத் தேடி வந்திருக்கிங்க?" என்று கேட்கிறார்.

அதற்கு வந்த வருமான வரித்துறை அதகாரி ஐயா, "நான் ஒரு ஏழைங்க... எனக்கு ஒரே பொண்ணு. கல்யாணத்துக்கு மாப்பிள்ளைத் தேடினேன். நல்ல இடம் கிடைச்சிருக்கு. என் பொண்ணுக்கும் மாப்பிள்ளையை ரொம்பப் பிடிச்சிருக்கு. என் வசதிக்கு மாப்பிள்ளை வீட்டில் கேக்கிற அளவுக்கு நகை போடமுடியவில்லை. அதனால கல்யாணம் நின்னுடுமோனு பயமா இருக்கு. உங்களப்பத்தி கேள்விப்பட்டிருக்கேன். அதான் உதவி கேட்டு வந்திருக்கேன். என் பொண்ணோட வாழ்க்கை உங்க கையிலதான் இருக்கு..", என்று சொன்னவர் கலைவாணரைக் கையெடுத்து கும்பிட்டு நின்றார்.
அந்தப் பெரியவர் சொன்ன வார்த்தையும் கேட்ட உதவியும் கலைவாணரைத் துடிக்க வைத்துவிட்டது. "அடடா... என்ன இதுக்காவா கலங்கி நிக்கிறீங்க. வாங்க முதல்ல வந்து பலகாரம் சாப்பிடுங்க. வெற்றிலை போடுங்க. அதுக்குள்ள என்னோட உதவியாளன் வருமானவரித் துறை வரைக்கும் போயிருக்கான். அவன் வந்துடட்டும்... அவனுக்குதான் எல்லாம் தெரியும். வாங்க முதலில் சாப்பிடுங்க..," என்று வீட்டிற்குள் அழைத்துப் போகிறார்.

அவர் சாப்பிட பலகாரம் கொடுக்கிறார். அதன்பிறகு வெற்றிலையை மடித்துக் கொடுத்து 'சாப்பிடுங்க' என்று சொல்லிவிட்டு, "பயப்படவேண்டாம்... நகைக்காக உங்க பொண்ணோட கல்யாணம் நிக்கக் கூடாது. நல்லபடியாக நடத்துங்க.. அதுக்கு என்ன செலவு ஆகுமோ நான் கொடுத்துடறேன். பையன் வந்துடட்டும்," என்று கலைவாணர் பேசிமுடிப்பதற்குள் வந்த வருமான வரித்துறை அதிகாரி எழுந்து கொள்கிறார்.
"என்னை மன்னிக்கவும், நான்தான் இந்த ஊர் வருமான வரித்துறை அதிகாரி. உங்க பையன் கொண்டு வந்த கணக்கைப் பார்த்தேன். எல்லா பக்கத்திலும் அதுக்கு உதவி, இதுக்கு உதவி என்று போட்டிருந்தது. இப்படியெல்லாம் தொடர்ந்து யாரும் உதவி செய்ய மாட்டாங்க. அது உண்மைதானா என்பதை தெரிந்துக் கொள்ளத்தான் நான் வந்தேன். என்னை மன்னிச்சுடுங்க... உங்க வள்ளல் குணத்தைப் புரிந்துக் கொண்டேன். இனி இந்த ஊரில் நான் வருமான வரித்துறை அதிகாரியாக நான் இருகின்ற வரை நீங்க செய்கின்ற உதவிகளுக்கு வருமானவரி விலக்கு அளிக்கின்றேன்," என்று கூறிவிட்டுச் சென்றார்.

அவர் சொன்னபடியே அந்த ஊரில் இருக்கின்றவரை சொன்னபடி செய்தார். கஷ்டம் என்று வருகிறவர்களுக்கு அள்ளி கொடுக்கும் வள்ளல் குணத்தை எம்.ஜி.ஆர் அவர்கள் இவரிடமிருந்துதான் கற்றுக்க கொண்டார்.
அதே போல, வாரிக் கொடுக்கும் வள்ளல் தன்மையில் தனது வாரிசு என எம்ஜிஆரைத்தான் அறிவித்தார் கலைவாணர் என்எஸ்கே!


Click it and Unblock the Notifications











