நித்யா தாஸுக்கு டும் டும்!
மனதோடு மழைக்காலம் நாயகி நித்யா தாஸுக்கு கல்யாணம் நிச்சயமாகியுள்ளது. சீக்கியரான பைலட்டுக்கும், நித்யாவுக்கும் திருமணம் நிச்சயமாகியுள்ளதாம்.
மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்த நடிகைகளில் நித்யாவும் ஒருவர். ஆனால் மற்றவர்கள் எல்லாம் தேற்றிய அளவுக்கு நித்யா தேறவும் இல்லை, தேற்றிக் கொள்ளவும் முடியவில்லை.மனதோடு மழைக்காலம் படத்தில் ஷாமுடன் இணைந்து நடித்தார் நித்யா. அத்தோடு சரி, அதன் பிறகு தமிழில் நித்யாவுக்கு வாய்ப்பே வரவில்லை.
இந்த நிலையில் நித்யாவுக்கு கல்யாணம் முடிவாகி விட்டது. ஞாயிற்றுக்கிழமை டும் டும் கொட்டப் போகிறது. இது ஒரு காதல் கல்யாணமாம்.
பஞ்சாப்பைச் சேர்ந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானியான அரவிந்த் சிங் என்பவருடன் நித்யாவுக்கு கல்யாணம் நடைபெறுகிறது. குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் ஞாயிற்றுக்கிழமை கல்யாணத்தை முடித்துக் கொண்டு, தாஜ் ரெசிடென்சி ஹோட்டலில் பிரமாண்ட வரவேற்புக்கு ஏற்பாடு செய்துள்ளனராம்.
நெருங்கிய நண்பர்கள், முக்கியப் பிரமுகர்கள் இதில் கலந்து கொள்ளவுள்ளனராம்.
நித்யாவுக்கும், அரவிந்திக்கும் காதல் மலர்ந்தது நிலத்தில் அல்ல, வானில். அடிக்கடி விமானத்தில் பயணித்தபோது நித்யாவுக்கும், அரவிந்திக்கும் காதல் அரும்பியதாம். உடல் மட்டும் விமானத்துக்குள் இருக்க, உள்ளங்கள் இரண்டும் வெளியே வந்து வானில் வட்டமடித்து காதலை டெவலப் செய்துள்ளனர்.
முதலில் இரு வீட்டாரும் காதலை எதிர்த்துள்ளனர். ஆனால் பிறகு இவர்களின் உண்மையான அன்பைப் புரிந்து கொண்டு அங்கீகாரம் கொடுத்தனராம். இதையடுத்து காதல், டேக் ஆப் ஆகி கல்யாணத்தில் லேண்ட் ஆகியுள்ளது.
தனது மனம் கவர்ந்த மணாளன் குறித்து நித்யா கூறுகையில், அரவிந்த் ஒரு ஜென்டில்மேன். எனது விருப்பத்திற்கு எதிராக ஒருபோதும் நடக்க மாட்டார் என்று சர்டிபிகேட் தருகிறார்.
நலம் வாழ வாழ்த்துவோம்!


Click it and Unblock the Notifications











