பிளாஷ்பேக்: 'திறமை இல்லாமலே வந்திடறாங்க..' ஆவேசமான இசை அமைப்பாளர்.. அமைதியாக அதை செய்த எஸ்பிபி!
சென்னை: ஆரம்ப காலத்தில், தான் ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் அவமானப்பட்டதை பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார் பிரபல பாடகர் எஸ்.பி.பி!
சினிமாவில் எந்த புகழும் எளிதாகக் கிடைத்து விடுவதில்லை. அதற்கு பின்னே பெரும் போராட்டம் இருக்கிறது.
சோதனைகள், அவமானங்கள் இருக்கிறது. பெரும் வலிகள் இருக்கிறது. அதுதான் உண்மை.

ஓராயிரம் வலிகள்
புகழ்பெற்றிருக்கிற ஒவ்வொருவருக்குப் பின்னும் ஓராயிரம் வலிகள் ஓரமாக அமர்ந்திருக்கிறது. எஸ்.பி.பிக்கு இல்லாமல் இருக்குமா என்ன? கொரோனாவுக்காக மருத்துவமனைக்குச் சென்ற எஸ்.பி.பி, இன்று நம்மோடு இல்லை. மீண்டு வருவேன் என்றவர் வராமலேயே போய்விட்டார். அரசு மரியாதையோடு அடக்கம் செய்யப்பட இருக்கிறது அவர் உடல்.

கின்னஸ் சாதனை
நாற்பதாயிரம் பாடல்கள் பாடி கின்னஸ் சாதனை படைத்த இந்த ஜாம்பவான், ஆரம்ப காலங்களில், சினிமா வாய்ப்புத்தேடிக் கொண்டே மேடைக் கச்சேரிகளில் பாடி வந்தவர். அது இளையராஜா, ராசய்யாவாக இருந்த காலம். அவரோடு இவரும் கங்கை அமரனும் இருந்த காலங்கள் பற்றி நிறைய பேசியிருக்கிறார்கள் இவர்கள்.

கோதண்டபாணி
எஸ்.பி.பியை தெலுங்கில் பாடகராக அறிமுகம் செய்தவர் இசை அமைப்பாளர் எஸ்.பி. கோதண்டபாணி. 1967 ஆம் ஆண்டு வெளியான ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ மரியாத ராமனா படத்தில்தான் முதன் முதலாக பாடல் பாடினார். பாடல் வாய்ப்பு கேட்டபோது தனக்கு நடந்த அனுபவங்களை, தனது பேட்டியில் கூறியிருக்கிறார் எஸ்.பி.பி.

எல்.ஆர்.ஈஸ்வரி
அதுபற்றி விவரம்: தெலுங்கு இசை அமைப்பாளர் சத்யம் (செல்லப்பிள்ளை சத்யநாராயண சாஸ்திரி)யுடன் எனக்கு 1968 ஆம் ஆண்டு பழக்கம் ஏற்பட்டது. அவர் இசையில்தான் பாலமசசுலு (Palamanasulu) என்ற படத்துக்காகப் பாடுவதற்கு சென்றேன். அது, 1968 ஆம் வருடம். ஒரு டூயட் பாடல். எல்.ஆர்.ஈஸ்வரி அப்போது மிக பிரபலமான பாடகி. கோல்டன் ஸ்டூடியோவில் ரெக்கார்டிங்.

அழுது கொண்டிருந்தேன்
அந்தப் பாடலில், இசை அமைப்பாளர் சத்யம் எதிர்பார்ப்புக்கு என்னால் பாடமுடியவில்லை. 'திறமை இல்லாதவங்கள்லாம் பாடறதுக்குன்னு வந்துடறாங்க' என்று என்னை நோக்கி கத்தினார். அந்த ஸ்டூடியோ ஒரு மாந்தோப்புக்குள் இருந்தது. இந்த அவமானத்தை என்னால் தாங்க முடியாமல், ஒரு மாமரத்தின் அடியில் அமர்ந்து நான் அழுதுகொண்டிருந்தேன்.

பாடச் சொல்லுங்க
அப்போது தயாரிப்பு மேலாளர் அட்லூரி பூர்ணச்சந்திர ராவ், மற்றும் தயாரிப்பு நிர்வாகி ஒய்.வி.ராவ் ஆகியோர் எனக்கு ஆறுதல் கூறினார்கள். என்னை இசை அமைப்பாளர் சத்யத்திடம் அழைத்துச் சென்று, 'இவன் சின்ன பையன். அவனை இப்படியா ட்ரீட் பண்ணுவீங்க? திரும்பவும் பாடச் சொல்லுங்க என்றனர்.

முதல் அனுபவம்
அதற்கு அவர், நீங்க யாரையாவது அழைத்து வந்து பாடச் சொன்னால் எப்படி? நான் எப்ப ரெக்கார்டிங்கை முடிக்க முடியும், சொல்லுங்க? என்றார். பிறகு நான் பாடிய பாடலை மீண்டும் பதிவு செய்தார். இதுதான் இசை அமைப்பாளர் சத்யமுடன் எனது முதல் அனுபவம். பிறகு நான் இல்லாமல் அவர் ரெக்கார்டிங் செய்ததே இல்லை.

இந்துஸ்தானி
அவருக்கு குழந்தை இல்லாததால், என்னை அவர் மகன் என்றுதான் அழைக்க ஆரம்பித்தார். அவர் இசையில் பல மெலடிகளை பாடி இருக்கிறேன். அவர்தான் எனக்கு இந்துஸ்தானி இசை அறிமுகப்படுத்தி வைத்தார். ஸ்டைலாக பாடவும் வைத்தார். இவ்வாறு எஸ்.பி.பி முன்பு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











