விவாகரத்து கோரி மீரா வாசுதேவன் வழக்கு

டிவி விளம்பரங்கள் மூலம் பிரபலமடைந்தவர் மீரா வாசுதேவன். அவர் நடித்த கிரிக்கெட்டாய நமஹ என்ற விளம்பரம் நாடு முழுவதும் படு பிரபலமானது.
அதன் பிறகு அவர் மாடலிங்கில் குதித்தார். பின்னர் சினிமாவுக்கும் வந்தார். உன்னைச் சரணடைந்தேன் படத்தின் மூலம் ஹீரோயின் ஆனார். ஆனால் அவர் எதிர்பார்த்த அளவுக்கு பட வாய்ப்புகள் இல்லை. ஜெர்ரி என்ற படத்தில் நடித்துள்ளார்.
தற்போது டிவி சீரியல்களில் கவனம் செலுத்தி வருகிறார். மனைவி என்ற தொடரில் நடித்தார். சூர்யவம்சம், புதுமைப்பெண்கள் ஆகிய தொடர்களில் நடித்து வருகிறார்.
மீராவுக்கும், பிரபல ஒளிப்பதிவாளர் அசோக் குமாரின் மகன் விஷாலுக்கும் கடந்த 2005ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பின்னரும் கூட மீரா நடித்து வந்தார்.
கணவருடன் சந்தோஷ தாம்பத்யம், நடிப்பு என இரட்டை சவாரி செய்து வந்த மீராவுக்கும், விஷாலுக்கும் இடையே சமீப காலமாக பூசல் மூண்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது தனது கணவரை விவாகரத்து செய்ய மீரா முடிவு செய்துள்ளார். கடந்த மாதம் அவர் வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், கணவர் அடித்து துன்புறுத்துவதாக கூறி புகார் கொடுத்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று (ஜனவரி 2) மதியம் குடும்ப நல நீதிமன்றத்தில் தனது வக்கீலுடன் வந்து விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார். கணவர் கொடுமைப்படுத்துவதாகவும், எனவே விவாகரத்து வழங்க வேண்டும் என்றும் தனது மனுவில் மீரா கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











