'ஜோதிகிருஷ்ணாவுக்கு ஹீரோயின் ராசி'
இயக்குநராக இருந்து நடிகராக அவதாரம் எடுத்துள்ள ஜோதிகிருஷ்ணாவுக்கு ஹீரோயின்கள் ராசி. அவர் அறிமுகப்படுத்திய இலியானா, தமன்னா, ஷ்ரியா ஆகியோர் இன்று முன்னணி நாயகிகளாக உள்ளநர் என்று இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் கூறியுள்ளார்.
சென்னை கமலா திரையரங்கில் 'ஊலலலா' (ஊர்வசி, லதா, லலிதா, லாவண்யா) திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. தமிழ் சினிமாவின் முன்னணி பிரபலங்கள் மற்றும் நட்சத்திரங்கள் இதில் கலந்துகொண்டனர்.
பிரம்மாண்டமான பல திரைப்படங்களை கொடுத்த தயாரிப்பாளர் ஏ.ம்.ரத்னத்தின் மூத்த மகன் ஜோதி கிஷ்ணா இப்படத்தை இயக்கி இதில் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார்.
ஆடியோ வெளியீட்டு விழாவில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராமநாராயணன், தயாரிப்பாளர் முரளி, கே.எஸ்.ரவிக்குமார், தரணி, கே.ஆர்., அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா, லட்சுமி மூவி மேக்கர்ஸ் முரளிதரன், கஞ்சா கருப்பு, நடிகை கீர்த்தி சாவ்லா, ரமேஷ் கண்ணா, சிட்டி பாபு, பட்டிமன்றம் ராஜா மற்றும் பலர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
திரைப் பிரபலங்களின் முன்னிலையில் "ஊலலலா" திரைப்படத்தின் இசைத் தட்டினை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராமநாராயணன் வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் கே.எஸ்.ரவிக்குமார் பேசுகையில் ஜோதி கிருஷ்ணாவின் இயக்கதில் அமைந்த முதல் படம் "எனக்கு 20 உனக்கு 18" என்பது அனைவரும் அறிந்த விஷயம். ஆனால் அவர் என் "நட்புக்காக" படத்தின் கதாசிரியர். அப்போது அவர் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார்.
ஜோதி கிருஷ்ணா அறிமுகம் செய்து வைத்த நாயகிகள் ஸ்ரேயா, தமன்னா, இலியானா என எல்லாரும் இன்று முன்னணி நடிகைகளாக இருக்கிறார்கள். அதே போல் இந்த படத்தில் அறிமுகமாகும் நான்கு நாயகிகளும் முன்னணிக்கு வருவார்கள் என்றார்.
தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராமநாராயணன் "ஊலலலா" படத்தின் குழுவினருக்கு தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்ததோடு, காதலிக்க நேரமில்லை, உள்ளத்தை அள்ளித்தா படங்களைப் போலவே "ஊலலலா" படமும் சிறப்பான படமாக அமையும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
ஏ.எம்.ரத்னம் மிகவும் தைரியமானவர் என்றும், துணிச்சலோடு அவர் தயாரித்த இந்தியன், பாய்ஸ் படங்களை குறிப்பிட்டு பேசினார் இயக்குனர் கே.ஆர்.
இயக்குனர் தரணி பேசுகையில் "ஊலலலா" படத்தின் இசை வெளியீட்டு விழா அழைப்பிதழே மிகவும் வித்யாசமாக உள்ளது. இதை வைத்தே இப்படத்தின் வெற்றியை கணித்துவிடமுடியும், என்னுடைய மெகா ஹிட் திரைப்படங்களான தூள், கில்லி போன்ற படங்கள் ஏ.எம்.ரத்னம் தயரித்தது தான் என்றார்.
இயக்குனர் பேரரசு பேசுகையில், ஜோதி கிருஷ்ணா இயக்குனர் கே.ஆர்-ரை பின்னுகுத் தள்ளிவிட்டார். கே.ஆர். 'வனஜா கிரிஜா" என இரண்டு பெண்களின் பெயரைத்தான் படத்துக்கு டைட்டிலாக வைத்தார். ஆனால் ஜோதி கிருஷ்ணா நான்கு பெண்களின் பெயரை டைட்டிலாக வைத்துள்ளார் என அரங்கத்தை கொஞ்சம் கலகலப்பாக்கினார்.
பட்டிமன்றம் ராஜா பேசுகையில் நான் இந்தப் படத்தில் நாயகி ப்ரீத்தி பண்டாரியின் அப்பாவா நடித்துள்ளேன். அவருக்கு தமிழ் தெரியாத காரணத்தால் வசனங்களை இந்தியில் தான் பேசுவார். அவர் பேசும் இந்தி எனக்கு புரியாது, இருந்தாலும் காட்சிக்கு எற்றமாதிரி நான் ரியாக்ஷன் கொடுக்க வேண்டிய நிலை. மேலும் ஒவ்வொரு படத்தின் வெற்றிக்கும் அந்த திரைப்படத்தின் உதவி இயக்குனர்கள் தான் காரணம். எனவே உங்கள் வெற்றியில் தயவு செய்து அவர்களை நினைவு கூறுங்கள் என்றார். அரங்கத்தில் இருந்த அனைவரும் அதை கைகளை தட்டி ஆதரித்தனர்.
சிவகாசி படத்தில் நடிக்க வைத்து தன்னை ஒரு முன்னணி காமெடி நடிகனாக்கிய தயரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்திற்கு நன்றிகளை தெரிவித்துக் கொண்டார் கஞ்சா கருப்பு.
இறுதியாக பேசிய ஏ.எம்.ரத்னம் தன் மகன் ஜோதி கிருஷ்ணா நடிக்க வந்த நிகழ்ச்சியை சொன்னார். முன்பெல்லாம் வைர வியாபாரிகளும், தொழிலதிபர்களும் மட்டுமே இந்தியாவில் திரைப்பட தயாரிப்பாளர்கள். ஆனால் இப்போது ரிலையன்ஸ், ஸ்ரீ ஆஷ்ட வினாயக் போன்ற கார்பரேட் கம்பனிகளும் சினிமா தயாரிப்பில் இறங்கியிருக்கிறார்கள்.
ஜோதி கிருஷ்ணாவை நான் லண்டனில் படிக்க வைத்தேன், ஹாலிவுட்டில் படம் எடுக்க சொன்னேன். ஆனால், அவன் தமிழ் சினிமா மேல் உள்ள காதலால் தமிழ் படங்கள் எடுக்கிறான் என்றார்.
விழா முடிவில் இயக்குனரும் படத்தின் நாயகனுமான ஜோதி கிருஷ்ணா வந்திருந்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொண்டார். குறிப்பாக தமிழில் வசனம் பேசி நடித்த நாயகி ப்ரீத்தி பண்டாரிக்கு நன்றி தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











