Exclusive: இதற்காகத்தான் டிராப் ஆனதா, சிம்பன்சியாக கமல் நடிக்க இருந்த அந்த சயின்ஸ்பிக்சன் படம்?
சென்னை: கமல்ஹாசன் சிம்பன்சியாக நடிக்க இருந்த சயின்ஸ்பிக்சன் படம், எதற்காக நின்றுபோனது என்பதை அதன் தயாரிப்பாளர் நமக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பல படங்கள் அறிவிப்புகளோடு நின்று போயிருக்கிறது. சில படங்கள் பூஜையோடு நின்று போயிருக்கிறது.
இன்னும் சில படங்கள், ஷூட்டிங் தொடங்கி நடந்துகொண்டிருந்த நிலையில், பாதியிலேயே டிராப் ஆகி இருக்கிறது.

வித்தியாச முயற்சி
இதற்கு எக்கச்சக்க படங்களைச் சொல்ல முடியும். ஒவ்வொரு மொழியிலும் இப்படி பல படங்கள் கிடப்பில் கிடக்கின்றன. அப்படி நின்று போன பல படங்களில், மறக்க முடியாத புராஜக்ட் 'நரன்'. கமல்ஹாசனின் வித்தியாசமான முயற்சி இந்தப் படம். ஒவ்வொரு படத்திலும் தன்னை வேறொருவராக காட்டும் கமல்ஹாசனின் முயற்சியில் உருவாக இருந்த இது, சயின்ஸ்பிக்சன் கதையை கொண்ட படம்!

சயின்ஸ்பிக்சன்
இதில் கமல்ஹாசன், சிம்பன்சியாக நடிக்க இருந்தார். அதெப்படி என்ற ஆர்வம் வருகிறதா? அதுதான் கதையே. இந்த சயின்ஸ்பிக்சன் படத்துக்கு இருபது வருடத்துக்கு முன்பே எக்கச்சக்க பட்ஜெட். இதில், சயின்டிஸ்டாக நடிக்க இருந்தவர், பிரபல இந்தி ஹீரோ அமிதாப் பச்சன். அவர் நடிக்க ஓ.கே.சொல்லிவிட்டார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்க இருந்தார். இந்தி நடிகை ஒருவர், ஹீரோயின்.

திடீரென நின்றது
அமெரிக்கா சென்று சிம்பன்ஸி பற்றிய விவரங்களை எல்லாம் கேட்டு வந்த கமல்ஹாசன், ஒரு சிம்பன்ஸியை அங்கிருந்து சென்னைக்கு கொண்டு வந்து படப்பிடிப்பில் பயன்படுத்தவும் ஏற்பாடு செய்தார். அப்போது ஆளவந்தான் படத்தில் நடித்துக்கொண்டிருந்தார் கமல். நரன் படத்தைத் தொடங்குவதற்கான எல்லா வேலைகளும் ரெடியாகிவிட்டன. படத்துக்கான பூஜையும் போடப்பட்டுவிட்டது. இந்நிலையில் திடீரென நின்றது படம். ஏன்?

தயாரிப்பாளர் தேனப்பன்
இந்த நரன் படத்தைத் தயாரிக்க இருந்த, பிரபல தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பனிடம் இதுபற்றி கேட்டோம். இவர், கமல்ஹாசன் நடித்த காதலா காதலா, பம்மல் கே சம்மந்தம், பஞ்சதந்திரம், திவான், கனா கண்டேன், கடந்த சில வருடங்களுக்கு முன் வெளியான பேரன்பு உட்பட பல படங்களை தயாரித்தவர். இப்போது படங்களில் நடித்தும் வருகிறார்.

சென்னையில் சிம்பன்சி
பி.எல்.தேனப்பன் நம்மிடம் கூறும்போது, 'அந்தப் படத்துக்கு பூஜை போட்டோம். அமிதாப்பச்சன் நடிக்க சம்மதித்திருந்தார். கமல்ஹாசன் சிம்பன்சியாக நடிக்க இருந்தார். இதற்காக அமெரிக்கா சென்று பேசி, ஒரு சிம்பன்சியை சென்னைக்கு கொண்டு வர ஏற்பாடாகி இருந்தது. இதற்கான பட்ஜெட் அதிகமாக போய் கொண்டே இருந்தது. கமல்ஹாசனின் கெட்டப்புக்கே ஒன்றரை கோடி ரூபாய்.

அனுமதிக்கவில்லை
சிம்பன்சியை இங்கு கொண்டு வந்து அதற்கு தனி ஏசி அறையை உருவாக்கி அதைப் பாதுகாப்பது உள்ளிட்ட செலவுகளுக்கு 2.5 கோடி ரூபாய் வந்தது. இருந்தாலும் இங்கு கொண்டு வர முடிவு செய்தோம். ஆனால், மத்திய அரசு அதற்கு அனுமதிக்கவில்லை. பிறகு ஷூட்டிங் ஸ்பாட்டை, பாங்காங்கிற்கு மாற்றி அங்கு எடுக்கலாம் என முடிவு செய்தோம்.

பஞ்சதந்திரம் கதை
பிறகு மற்ற செலவுகளை எல்லாம் கூட்டி கழித்துப் பார்த்தால், பட்ஜெட் வேறு எங்கோ சென்றிருந்தது. அவ்வளவு தொகையையும் செலவையும் தாங்க முடியாது என்பதால் கமல்ஹாசனிடம் பேசினேன். அவரை மெதுமெதுவாக சம்மதிக்க வைத்து வேறு கதை கேட்டேன். அப்போதுதான் சொன்னதுதான் பஞ்சதந்திரம் லைன். பிறகு அந்த படத்தை தயாரித்தேன்' என்றார்.


Click it and Unblock the Notifications











