மன்னிப்பு கேட்ட 'பொல்லாதவன்'

தனுஷ், குத்து ரம்யா நடிப்பில் வெளியான பொல்லாதவன் படத்தில் நொண்டி என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டு வசனம் வைக்கப்பட்டிருந்தது. மேலும், உடல் ஊனமுற்றவர்களால் தாம்பத்ய வாழ்க்கை நடத்த முடியாது என்ற தவறான கருத்தும் இடம் பெற்றிருந்தது.
இதற்கு உடல் ஊனமுற்றோர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இந்த வசனங்களை அனுமதித்த சென்சார் போர்டின் மடத்தனத்தையும் அவர்கள் கண்டித்திருந்தனர்.
இந்த நிலையில் இப்படிப்பட்ட வசனங்களை வைத்ததற்காக பொல்லாதவன் பட இயக்குநர் வெற்றிமாறன் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.
இதுகுறித்து வெற்றிமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொல்லாதவன் படத்தில் கதாநாயகியின் தந்தை ஒரு காட்சியில் பேசும் வசனம் மாற்றுத்திறன் படைத்த சகோதர, சகோதரிகளின் மனதை புண்படுத்தும் வகையில் அமைந்ததற்காக வருத்தப்படுகிறேன்.
அந்த உரையாடலில் நாங்கள் வெளிப்படுத்த முயன்றது, ஒரு சாமானிய நடுத்தர மனோநிலையை மட்டுமே. ஆனால் அது ஏற்படுத்தி இருக்கிற மன உளைச்சலையும், வேதனையையும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
இந்தத் தவறுக்கு பொறுப்பேற்று இனி வரும் என் படங்களில் இதுபோன்ற தவறுகளை தவிர்ப்பேன் என்று மானசீகமாக மன்னிப்பு கோருகிறேன் என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











