வில்லன்களின் சூப்பர் ஸ்டார்!
இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் சூப்பர் ஸ்டாராக ரஜினிகாந்த் இருப்பதைப் போல, இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் வில்லனாக பிரகாஷ் ராஜ் அவதாரம் எடுத்துள்ளார்.
கன்னடப் படங்களில் சாதாரண வேடங்களில் வந்து போய்க் கொண்டிருந்தவர்தான் பிரகாஷ் ராஜ். அவரது நடிப்புத் திறமையை கன்னடத் திரையுலகினர் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.இந்த நிலையில்தான் பாலச்சந்தர் கண்ணில் பட்டு டூயட் மூலம் தமிழ் சினிமாவில் அதிரடி என்ட்ரி கொடுத்தார் பிரகாஷ் ராஜ். வந்தாரை வாழ வைக்கும் மண்ணாச்சே தமிழ்நாடு! பிரகாஷ் ராஜுக்கும் பெரிய சிவப்புக் கம்பளத்தை விரித்து வளர விட்டது.
டூயட் மூலம் கிடைத்த சூப்பர் வாய்ப்பை அப்படியே அள்ளிக் கொண்ட பிரகாஷ் ராஜ், கேரக்டர்களைப் பார்த்து பார்த்து தேர்வு செய்து கலக்க ஆரம்பித்தார். இன்றைக்கு இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் வில்லன் நடிகராக உருவெடுத்துள்ளார்.
ரூ 1 கோடி சம்பளம் வாங்குகிறாராம் பிரகாஷ் ராஜ். சில படங்களில் ஹீரோக்களை விட இவரது சம்பளம்தான் அதிகமாக இருக்கிறதாம். முன்பு போல வருகிற படங்களில் எல்லாம் நடிப்பதில்லை பிரகாஷ் ராஜ்.
முன்னணி ஹீரோக்களின் படமாக இருந்தாலும் கூட கேரக்டர் பிடித்தால்தான் நடிக்கிறாராம். கொஞ்சமாச்சும் நடிப்பதற்கு ஸ்கோப் உள்ள படங்களில்தான் நடிக்கிறார்.
சமீபத்தில் வெளியான ஆர்யா படத்தில் மாதவனை விட பிரகாஷ் ராஜின் கேரக்டரும், நடிப்பும்தான் வெகுவாக பேசப்பட்டது நினைவிருக்கலாம்.
அதேபோல வில்லனாகத்தான் நடிப்பேன் என்றும் கூறுவதில்லை பிரகாஷ் ராஜ். நல்ல கேரக்டரா என்று மட்டும்தான் பார்க்கிறார். கேரக்டர் அற்புதமாக இருந்தால் சம்பளத்தைக் குறைத்துக் கொள்ளக் கூட அவர் தயங்குவதில்லையாம்.
நடிப்போடு தயாரிப்பிலும் கலக்கிக் கொண்டிருக்கும் பிரகாஷ் ராஜ், விரைவில் தனது டூயட் மூவிஸ் நிறுவனத்தை விரிவுபடுத்தப் போகிறார். இதற்காக மும்பையைச் சேர்ந்த ஒரு நிறுவனம், பிரகாஷ் ராஜுடன் பேச்சு நடத்திக் கொண்டிருக்கிறதாம்.
டூயட் மூவிஸை விரிவுபடுத்திய பின்னர் ஆண்டுக்கு ஐந்து படங்கள் நறுக்காக கொடுக்க முடிவு செய்துள்ளாராம். எல்லாமே தமிழில்தானாம்.
கலக்கு செல்லம்!


Click it and Unblock the Notifications











