கன்னட பிரசாத் பெங்களூர் வீட்டில் சோதனை முக்கிய டைரி சிக்கியது
விபச்சாரி புரோக்கர் கன்னட பிரசாத்தின் பெங்களூர் வீட்டில் சோதனை நடத்திய தமிழக போலீஸார் அங்கிருந்து முக்கிய டைரி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.
தென்னிந்தியா முழுவதும் நடிகைகள், அழகிகளை வைத்து பிரமாண்ட அளவுக்கு விபச்சாரத் தொழிலை நடத்தி வந்த கன்னட பிரசாத் தற்போது போலீஸ் பிடியில் உள்ளார். அவரை முன்பு ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்த போலீஸார் தற்போது 5 நாள் காவலில் எடுத்துள்ளனர்.காவலில் எடுக்கப்ட்ட உடன் பிரசாத்தை பெங்களூர் அழைத்துச் சென்றனர். பெங்களூருக்கு பிரசாத்துடன் சென்ற போலீஸார், அங்கு பிரசாத்தின் உறவினர்கள், நண்பர்கள் பலரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவர்களின் வீடுகளிலும் சோதனை போடப்பட்டது.
இதேபோல, பிரசாத்தால் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட பெண்களிடமும் போலீஸார் அதிரடி விசாரணை நடத்தினர். சில கன்னட துணை நடிகைகளிடமும் விசாரணை நடத்தப்பட்டதாக தெரிகிறது.
இதுதவிர பிரசாத்தால் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட கல்லூரி மாணவிகள் சிலரையும் போலீஸார் ரகசியமாக அழைத்து விசாரித்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து ஜெயநகரில் உள்ள பிரசாத்தின் வீட்டில் இன்று காலை போலீஸார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது முக்கியமான டைரி ஒன்று சிக்கியதாக கூறப்படுகிறது. இந்த டைரியில் பல நடிகைகள், விபச்சார அழகிகளின் தொலைபேசி எண்கள், முகவரிகள் இடம் பெற்றுள்ளன.
இதுதவிர, பிரசாத்தின் வாடிக்கையாளர்களான பல தொழிலதிபர்கள், முக்கியப் புள்ளிகளின் தொலைபேசி எண்களும் இருப்பதாக கூறப்படுகிறது.
விசாரணை மற்றும் சோதனைகளை முடித்துக் கொண்ட போலீஸார் இன்று இரவு பிரசாத்தை சென்னைக்குக் கொண்டு வருகின்றனர். அதன் பின்னர் நாளை மாலை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பிரசாத்தை ஆஜர்படுத்திய பின்னர் சிறையில் அடைக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











