கலைஞர் வசனத்தில் பிரஷாந்த்
கலைஞர் கதை, வசனத்தில் பேசி நடிக்க யாருக்குத்தான் ஆசை இருக்காது. இப்போது அந்த பாக்கியம் பிரஷாந்த்துக்குக் கிடைத்துள்ளது.
கலைஞரின் கதை, வசனத்தில் நடிக்க நடிகர்களுக்கிடையே பெரும் ஆர்வம் எப்போதும் இருக்கும். இருந்தாலும் அது அத்தனை பேருக்கும் கிடைத்து விடாது. சிலர்தான் கலைஞரின் வசனம் பேசி நடித்துள்ளனர்.ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரத்குமார் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இதுவரை கலைஞரின் வசனம் பேசி நடித்ததில்லை. இந்த நிலையில் பிரஷாந்த்துக்கு அந்த அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது.
கலைஞர் எழுதிய பொன்னர் சங்கர் நாவல் திரைப்படமாகிறது. கொங்கு மண்டலத்தில் வாழ்ந்து மறைந்த வரலாற்று நாயகர்கள்தான் பொன்னர் சங்கர்.
கலைஞருக்கு பல விருதுகளையும், பாராட்டுக்களையும் வாங்கிக் கொடுத்த நாவல் பொன்னர் சங்கர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாவல், சென்னைத் தொலைக் காட்சியில் டெலி பிலிமாக வெளியானது.
இப்போது இந்த நாவலை படமாக்க பிரஷாந்த்தின் தந்தை தியாகராஜன் முடிவு செய்துள்ளார். இதற்கான ஒப்புதலையும் கலைஞரிடமிருந்து அவர் வாங்கி விட்டாராம். சமீபத்தில் தனது பிறந்தநாளையொட்டி கலைஞரை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் பிரஷாந்த்.
அப்போது, பொன்னர் சங்கரின் திரைக்கதையை கலைஞரிடம் காட்டி ஒப்புதல் வாங்கினாராம் தியாகராஜன். இப்படத்தைத் தயாரித்து இயக்கவும் போகிறார் தியாகராஜன். ரூ. 15 கோடி பட்ஜெட்டில் படம் உருவாகவுள்ளதாம். விரைவில் படம் குறித்த அறிவிப்பை முறைப்படி வெளியிடவுள்ளார் தியாகராஜன்.


Click it and Unblock the Notifications











