ப்ரீத்திக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
நடிகை ப்ரீத்தி வர்மா, வருகிற 28ம் தேதி சென்னை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தெலுங்குப் படப்பிடிப்புக்காக ராஜமுந்திரிக்குப் போன இடத்தில் திடீரென தலைமறைவாகி பரபரப்பை ஏற்படுத்தினார் ப்ரீத்தி வர்மா. அங்கிருக்கிறார், இங்கிருக்கிறார் என வதந்திகள் ஒருபக்கம் களை கட்ட, இவர் கடத்தினார், அவர் கடத்தினார் என கதைகள் கிளம்ப, கடைசியில் சமீபத்தில் மும்பை கோர்ட்டில் சரணைடந்தார் ப்ரீத்தி வர்மா.தனது பெற்றோர் விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயற்சிக்கிறார்கள் என்று பெற்றோர் மீது சரமாரியாக புகார்களை அடுக்கினார். இதைத் தொடர்ந்து நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்தார் ப்ரீத்தி.
அதில், நான் சென்னைக்கு வர தயாராக இருக்கிறேன். ஆனால் சென்னைக்கு வந்தால் என்னை கொலை செய்யலாம் அல்லது என்னை தற்கொலைக்கு தூண்டலாம். எனவே எனது பெற்றோரிடம் இருந்து தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி கே.என்.பாஷா முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் குமரேசன் ஆஜராகி நடிகை ப்ரீத்திவர்மாவை கொடுமைப்படுத்தியதாக எந்த புகாரும் தரப்படவில்லை.
அவர் காணாமல் போனதாகத்தான் போலீசாருக்கு புகார் வந்துள்ளது. ப்ரீத்தி வர்மா பாதுகாப்பு கேட்டால் அவருக்கு பாதுகாப்பு வழங்க தயாரக இருக்கிறோம் என்று தெரிவித்தார்.
இதையடுத்து மனு மீதான விசாரணை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. இன்று மீண்டும் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பாட்ஷா, ப்ரீத்தி வர்மா வருகிற 28ம் தேதி எழும்பூர் தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க வேண்டும்.
அதன் பின்னர் ப்ரீத்திக்குத் தேவையான பாதுகாப்பை அளிக்க போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.


Click it and Unblock the Notifications











