படம் பார்க்க ப்ரீ பெய்ட் கார்டு!
இந்தியாவிலேயே அதிக தியேட்டர்களைக் கொண்டுள்ள திரைப்பட வர்த்தக நிறுவனமான பிரிமிட் சாய்மீரா தியேட்டர்ஸ் லிமிட்டெட் தமிழகத்திலேயே முதல் முறையாக திரைப்படம் பார்க்க ப்ரீ பெய்ட் கார்டு முறையை அமலுக்குக் கொண்டு வரவுள்ளது.
சாய்மீரா தியேட்டர்ஸ் நிறுவனம் வசம் நாடு முழுவதும் மொத்தம் 371 தியேட்டர்கள் (29 மல்ட்டிபிளக்ஸ் உள்பட) உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை சொந்தமானவை. மற்றவை நீண்ட கால லீசுக்கு எடுக்கப்பட்டுள்ளவை.இந்த எண்ணிக்கையை 2010ம் ஆண்டுக்குள் 2000 ஆக அதிகரிக்க சாய்மீரா திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் விரைவில் மூவி கார்டு முறையை அமல்படுத்தப் போகிறது சாய்மீரா.
இது ஒரு ப்ரீ பெய்ட் கார்டு. வரிசையில் காத்திருந்து டிக்கெட் எடுக்கும் சிரமம் இதில் கிடையாது. அடிக்கடி சினிமா பார்ப்போருக்கு இது பெரும் உதவியாக இருக்கும்.
கடந்த ஆண்டு சத்யம் சினி காம்ப்ளக்ஸ் இதுபோன்ற ஒரு கார்டை (ஃபியூயல்) அறிமுகப்படுத்தியது. ஆனால் இந்தக் கார்டை சத்யம் தியேட்டர் வளாகத்திற்குள் உள்ள தியேட்டர்களில் மட்டுமே பயன்படுத்த முடியும். ஆனால் சாய்மீரா கார்டை வைத்திருப்போர், இந்தியா முழுவதும் உள்ள சாய்மீரா தியேட்டர்களில் போய் படம் பார்க்க முடியும் என்பது இதில் விசேஷமானது.
சமீப காலமாக திரைப்பட விநியோகத்திலும் தீவிரமாக இறங்கியுள்ள சாய்மீரா, பார்த்திபன் நடித்துள்ள அம்முவாகிய நான் படத்தை ரூ. 1.50 கோடிக்கு வாங்கியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் இப்படத்தை சாய்மீராவே திரையிடவுள்ளது.
பத்மாமகன் இயக்க, பார்க்கர் பிரதர்ஸ் தயாரிக்க, பார்த்திபன், பாரதி நடிப்பில் உருவாகியுள்ள அம்முவாகிய நான் படம் ஆகஸ்ட் 31ம் தேதி திரைக்கு வரவுள்ளது.
செக்ஸ் தொழிலாளராக இப்படத்தில் நடித்துள்ளார் பாரதி. மிகவும் கவர்ச்சி காட்டி நடித்துள்ள பாரதி, துணிச்சலாக பல காட்சிகளில் நடித்துள்ளார். அவரது ஸ்டில்கள் ஏற்கனவே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த முறை பார்த்திபன் நடித்து வெளியான பச்சக்குதிரை தோல்விப் படமாகி விட்டதால், அம்முவை அதிகமாக நம்பியுள்ளார் பார்த்திபன்.


Click it and Unblock the Notifications











