'தாய்' காவியத்தில் ராதிகா!
கலைஞர் கருணாநிதியின் தமிழ் வண்ணத்தில் உருவான மாக்ஸிம் கார்க்கியின் தாய் காவியம் திரைப்படமாகிறது. அதில் தாய் வேடத்தில் ராதிகா நடிக்கவுள்ளார்.
| Click here for more images |
ரஷ்ய எழுத்தாளர் மாக்ஸிம் கார்க்கியின் புகழ் பெற்ற நாவல் தி மதர். இந்த நாவலை முதல்வர் கருணாநிதி தாய் காவியம் என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
இது தற்போது திரைப்படமாகிறது. கதையின் நாயகனான பாவல் வேடத்தில் கவிஞர் பா.விஜய் நடிக்கவுள்ளார். கதை, திரைக்கதை, வசனத்தை கலைஞரே கவனிக்கிறார். படத்தின் உருவாக்கத்திலும் நேரடி கவனம் செலுத்தவுள்ளார்.
படத்தின் முக்கியப் பாத்திரமே தாய் கதாபாத்திரம்தான். அந்த கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வைப்பது என்று நீண்ட ஆலோசனை நடந்தது. இறுதியில் ராதிகாவை அதில் நடிக்க வைப்பது என்ற முடிவுக்கு வந்தனர். ராதிகாவிடம் ஒப்புதல் கேட்டபோது மிகவும் சந்தோஷத்துடன் நடிக்க ஒப்புக் கொண்டாராம்.
முதல்வர் கருணாநிதியே, ராதிகாவின் பெயரை பரிந்துரை செய்துள்ளாராம். மேலும் படத்தின் பிற கேரக்டர்களுக்கு யாரைப் போடலாம் என்றும் அவர் பரிந்துரைத்துள்ளாராம்.
முதல்வரே விரும்பி தனது பெயரை கூறியதால் ராதிகா அகமகிழ்ந்து போயுள்ளாராம்.
கலைஞரின் எழுத்தில் ராதிகா நடிப்பது புதிதல்ல. ஏற்கனவே பாசப்பறவைகள், பாடாத தேனீக்கள். பூ ஒன்று புயலானது ஆகிய படங்களில் ராதிகா நடித்துள்ளார் என்பது நினைவிருக்கலாம்.
இந்த நிலையில் அருமையான தாய் வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு கலைஞர் மூலம் அவரைத் தேடி வந்துள்ளது.


Click it and Unblock the Notifications











