எச்.எம்.வி.யின் அம்பாசடர் ரஹ்மான்!
சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாகவுள்ள ஊ ல ல லா என்ற டேலண்ட் ஷோவில் நடுவராகப் பணியாற்றவுள்ளார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.
எச்.எம்.வி.சரிகமா இந்தியா நிறுவனம், ஏ.ஆர்.ரஹ்மானை தங்களது நிறுவன பிராண்ட் அம்பாசடராக அறிவித்துள்ளது. இந்த நிறுவனத்தின் 106 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக ஒருவரை பிராண்ட் அம்பாசடராக இந்த நிறுவனம் நியமித்துள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.இதுகுறித்து நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுப்ரதோ சட்டோபாத்யாயா செய்தியாளர்களிடம் கூறுகையில், எங்களது நிறுவன பிராண்ட் அம்பாசடராக ரஹ்மானை நியமித்துள்ளோம்.
எங்களது நிறுவனம் சார்பில் சன் டிவியில், விரைவில் ஊ ல ல லா என்ற டேலண்ட் ஷோ நடைபெறவுள்ளது. 13 பகுதிகளைக் கொண்டது இந்த டேலண்ட் ஷோ. இதில் ஏ.ஆர்.ரஹ்மான் நடுவராகப் பங்கேற்கிறார். தனது பிசியான வேலைகளுக்கு மத்தியிலும் அவர் நடுவராகப் பணியாற்ற ஒத்துக் கொண்டுள்ளார்.
தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்போர் தேர்வு செய்யப்படவுள்ளனர். நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் பிரபல கவிஞர்கள் எழுதிய பாடல்களுக்கு சொந்தமாக ட்யூன் அமைக்க வேண்டும்.
கவிஞர் வாலி இதற்காக நம்பிக்கை என்ற பெயரில் பாடல் ஒன்றை எழுதியுள்ளார்.
இதே நிகழ்ச்சி ஜெமினி டிவியிலும் ஒளிபரப்பாகும். இதற்கான போட்டியாளர்களை ஆந்திராவிலிருந்து தேர்ந்தெடுக்கவுள்ளோம் என்றார் சட்டோபாத்யாயா.
இளம் இசைப் புயல்களே சீக்கிரம் வாருங்கள், இசைப் புயலின் வாரிசாகுங்கள்!


Click it and Unblock the Notifications











