மரங்கள் மற்றும் சுவர்கள் அருகே ரஜினி செய்த மெனக்கெடல்கள்தான் சூப்பர் ஸ்டார்... பாக்யராஜ் பேச்சு
சென்னை: பெரும்பாலும் தான் இயக்கும் படங்களில் தானே கதாநாயகனாக நடிக்கும் பாக்யராஜ் அவர்கள் கமல் ரஜினி உள்ளிட்ட எந்த முன்னணி நடிகர்களையும் பெரிதாக இயக்கவில்லை.
ஆனால் இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் ரஜினி நடித்திருந்த நான் சிகப்பு மனிதன் திரைப்படத்தில் பாக்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அந்த படம் வெளிவந்த போது ரஜினிகாந்தை விட பாக்யராஜுக்கு நல்ல பெயர் கிடைத்ததாக ஒரு செய்தியும் உண்டு.

தனி சாம்ராஜ்ஜியம்
ஒரு பக்கம் ரஜினி, கமல் என்று நடிகர்கள் தனி சாம்ராஜ்யம் நடத்திக் கொண்டிருந்தார்கள் என்றால் இன்னொரு பக்கம் இயக்குநர்கள் பாக்கியராஜ், டி ராஜேந்தர் உள்ளிட்டோர் தனி சாம்ராஜ்யம் நடத்திக் கொண்டிருந்தனர். குறிப்பாக இயக்குநர் பாக்யராஜ் அவர்கள் திரைக்கதைக்கு பெயர் போனவர். இந்தியாவில் அவருக்கும் அவருடைய படங்களுக்கும் பெரிய அளவில் டிமாண்ட் இருந்தது. அமிதாப்பச்சனே இவரை அழைத்து படம் இயக்கச் சொன்னது வரலாறு.

எடிட்டிங் டேபிளிலேயே விற்பனை
பொதுவாக ஒரு திரைப்படம் வெற்றி பெற்று பிற மாநிலத்தவர்களின் கவனத்தை ஈர்த்தால்தான் அதனுடைய ரீமேக் ரைட்ஸ் வாங்கி பிற மொழிகளில் ரீமேக் செய்வார்கள். ஆனால் பாக்யராஜ் அவர்களின் படங்களை பொறுத்தவரை எடிட்டிங் டேபிளில் இருக்கும் போதே படத்தின் ரீமேக் ரைட்ஸ் விற்று விடுமாம். அவருடைய படங்களை அவரே தயாரித்திருந்தால் இந்நேரம் சென்னையில் பாதி இடத்தை வாங்கி இருப்பார் என்று சினிமா வட்டாரத்தில் கூறுவார்கள்.

16 வயதினிலே
இயக்குநர் பாரதிராஜாவிடம் தொழில் கற்றுக் கொண்ட இவர், அவருடைய முதல் படமான 16 வயதினிலேவிலிருந்து அவருடன் பணியாற்றி வந்தார். அந்தப் படத்தில் கமல், ஸ்ரீதேவி மற்றும் ரஜினிகாந்திற்கு இவர்தான் வசனம் சொல்லிக் கொடுப்பாராம். அதில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்திலும் நடித்திருப்பார் பாக்யராஜ்.

தமிழ் தெரியாத ரஜினி
கர்நாடகாவிலிருந்து நடிக்க வந்த புதிதில் நடிகர் ரஜினிகாந்திற்கு தமிழ் தெரியாததால் லைன் பை லைனாக பாக்யராஜிடமிருந்து வசனத்தை கேட்டு தெரிந்து கொண்டு மனப்பாடம் செய்து கொள்வாராம். பின் பாக்யராஜ் மற்ற வேலைகளை செய்து கொண்டிருக்கும் போது எதைச்சையாக பார்த்தால் ரஜினி மரங்களுக்கு முன்பும் சுவர்களுக்கு முன்பும் நின்று வசனத்தை மீண்டும் மீண்டும் பேசி பழகுவார் என்றும் அதனால் தான் இன்று சூப்பர் ஸ்டாராக வளர்ந்திருக்கிறார் என்றும் பாக்யராஜ் கூறியுள்ளார். 16 வயதினிலே படத்தில் நடிகர் ரஜினிகாந்திற்கு 500 ரூபாய் சம்பளம் என்பதும் கவுண்டமணியை பாரதிராஜாவிற்கு அறிமுகம் செய்து அதில் நடிக்க வைத்தார் என்பதும் கூடுதல் தகவல்.


Click it and Unblock the Notifications











