தெலுங்கில் ராஜ்கிரண்
ஏற்றிய வேட்டியும், இறக்கிய அண்ட்ராயருமாக தமிழ் திரையுலகைக் கலக்கி வந்த ராஜ்கிரண் அடுத்து தெலுங்கையும் ஒரு கை பார்க்க ஹைதராபாத்துக்கு வண்டி ஏறுகிறாராம்.
தமிழ் சினிமா ஹீரோக்களுக்கே உரிய எந்த லட்சணமும் இல்லாமல், இப்படியும் ஒரு ஹீரோவா என்று ஆச்சரியப்படும்படியான வித்தியாச உருவத்துடன் திரைக்கு வந்து பட்டையைக் கிளப்பியவர் ராஜ்கிரண்.அவருடைய முரட்டுத்தனமான தோற்றத்துக்கேற்றார்போல கேரக்டர்களை செலக்ட் செய்து தூள் கிளப்பியவர் ராஜ்கிரண். ராமராஜனுக்குப் பிறகு ராஜ்கிரணுக்கு அதிக ரசிகர்கள் இருந்தது ஒரு காலம். கோடியில் சம்பளம் பார்த்த வித்தியாச ஹீரோக்களில் இவரும் ஒருவர்.
காலப்போக்கில் ராஜ்கிரண் மேகம் விலகி பல்வேறு ஹீரோக்கள் உள்ளே புகுந்து ராஜ்கிரணுக்கு இடம் இல்லாமல் செய்து விட்டனர். வயதும் போய் விட்டதால், ஹீரோவாக நடிக்க முயலவில்லை ராஜ்கிரண்.
இந்த நிலையில்தான் சேரனின் தவமாய் தவமிருந்து படத்தில் ராஜ்கிரணுக்கு அருமையான கேரக்டர் கிடைத்தது. கிட்டத்தட்ட சேரனின் தந்தை வேடத்தில் வாழ்ந்து காட்டியிருந்தார் ராஜ்கிரண்.
இதையடுத்து சடசடவென வாய்ப்புகள் வந்தன. ஆனாலும் எல்லாவற்றையும் பொறுக்காமல் பார்த்துப் பார்த்து நடிக்க ஆரம்பித்தார் ராஜ்கிரண். அப்படியும் கூட முனி படம் அவருக்கு இறக்கத்தைக் கொடுத்து விட்டது.
இந்த நிலையில் மீண்டும் டைரக்ஷனுக்குத் திரும்பப் போகும் ராஜ்கிரண் அடுத்து தெலுங்கிலும் புகுந்து கலக்கவுள்ளாராம்.
தெலுங்கில் ராஜ்கிரணுக்கு நல்ல கிராக்கி உள்ளது. அவருக்கேற்ற வேடங்களும் வரிசை கட்டி வருகின்றனவாம். இதனால் தெலுங்கிலும் நடிக்கத் தீர்மானித்து விட்டார் ராஜ்கிரண். தெலுங்கு ஓரளவு பேசத் தெரியும் என்பதால், சொந்தக் குரலிலேயே பேசவும் தீர்மானித்துள்ளாராம் ராஜ்கிரண்.
சீக்கிரமே, வேட்டி, அண்ட்ராயர்களை அயர்ன் செய்து எடுத்துக் கொண்டு ஹைதராபாத்துக்கு வண்டி ஏறப் போகிறாராம் ராஜ்கிரண்.


Click it and Unblock the Notifications











