சந்தியா அவுட் உறுதி
செல்வராகவன் இயக்கத்தில் உருவாகவுள்ள இது மாலை நேரத்து மயக்கம் படத்திலிருந்து சந்தியா தூக்கப்பட்டு விட்டதை இயக்குனர் செல்வராகவன் உறுதிப்படுத்தியுள்ளார். இதனால் சந்தியா படு அப்செட்டில் இருக்கிறார்.
பருத்தி வீரன் வந்த புதிதில் அப்படத்தின் நாயகன் கார்த்தியை வைத்து இது மாலை நேரத்து மயக்கம் படத்தை இயக்கப் போவதாக அறிவித்தார் செல்வராகவன். அவருக்கு ஜோடியாக சந்தியா நடிப்பார் எனவும் அறிவித்தார்.இந்தப் படத்தை ஒயிட் எலிபன்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் பங்குதாரர்கள் செல்வராகவன், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் கேமராமேன் அரவிந்த் கிருஷ்ணா ஆகியோர்தான்.
ஆனால் பங்குதாரர்களுக்குள் பிரச்சினை ஏற்படவே, அரவிந்த் கிருஷ்ணா விலகிக் கொண்டார். இதையடுத்து யுவனின் மனைவி சுஜயா, புதிய பங்குதாரராக சேர்க்கப்பட்டார்.
இந்த நிலையில் இது மாலை நேரத்து மயக்கம் எப்போது ஆரம்பிக்கும் என்பதில் பெரும் குழப்பம் நிலவியது. குறிப்பாக நாயகி சந்தியா படு குழப்பமாக இருந்தார்.
இந்தச் சூழ்நிலையில்தான் சமீபத்தில் ஆயிரத்தில் ஒருவன் என்ற புதிய படத்தை இயக்கப் போவதாக அறிவித்தார் செல்வராகவன். அப்படத்தின் நாயகி ரீமா சென், ஹீரோ அதே கார்த்தி என்றும் அறிவித்தார் செல்வா.
இந்த அறிவிப்பைக் கேட்டதும் குழம்பிப் போனார் சந்தியா. அப்படியானால் இது மாலை நேரத்து மயக்கம் படம் என்னவானது என்று அவருக்கு குழப்பம் ஏற்பட்டது. இந்த நிலையில்தான் இது மாலை நேரத்து மயக்கம் படத்தின் பெயரைத்தான் ஆயிரத்தில் ஒருவன் என பெயர் மாற்றியுள்ளார் செல்வா எனத் தெரிய வந்தது.
அப்படியானால் தனது கதி என்ன ஆனது என்று தெரியாமல் விழித்தார் சந்தியா (அந்த நிலையில் தான் படத்திலிருந்து சந்தியா தூக்கப்படுவதை நாம் சொன்னோம்).
இந் நிலையில் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ரீமா மட்டுமே நாயகி என்று தெளிவுபடுத்தியுள்ளார் செல்வராகவன். இதனால் இப்போது தான் படத்தில், தான் இல்லை என்பது சந்தியாவுக்கு உறுதியாகத் தெரிய வந்துள்ளதாம்.
செல்வராகவனின் செயலால் பெரும் அப்செட் ஆகியுள்ளார் சந்தியா. அவரது கையில் இப்போது கண்ணாமூச்சி ஏனடா உள்பட 3 படங்கள் தமிழில் உள்ளதாம்.
செல்வா தந்த சோகத்தை மறந்து இந்தப் படங்களில் தீவிர கவனம் செலுத்தப் போகிறாராம் சந்தியா.


Click it and Unblock the Notifications











