வரலைன்னா உன் பேச்சு கா- சரத் வார்னிங்!!
சிங்கப்பூரில் ஆகஸ்ட் 11ம் தேதி நடைபெறவுள்ள நடிகர் சங்க கலை விழாவில் கலந்து கொள்ளாத நடிகர், நடிகைகளுக்கு தடை விதிக்கப்படும் என்று நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய சினிமாவின் 75வது ஆண்டு வைர விழாவையொட்டி ஆகஸ்ட் 11ம் தேதி சிங்கப்பூரில் பிரமாண்ட கலைவிழாவை நடத்த தென்னிந்திய நடிகர் சங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கான ஏற்பாடுளை நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாரும், செயலாளர் ராதாரவியும் செய்து வருகின்றனர்.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கலைஞானி கமல்ஹாசன் உள்ளிட்ட அனைத்துக் கலைஞர்களுக்கும் இதுதொடர்பாக முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு ரஜினி, கமலுக்கு நேரடியாக அழைப்பிதழ் வழங்கப்பட்டதாம்.
இதுதவிர விஜய், விக்ரம், அஜீத், திரிஷா, ஷ்ரியா உள்ளிட்ட இளம் முன்ணனிக் கலைஞர்களுக்கும் அழைப்பிதழ் போயுள்ளது. பலர் விழாவுக்கு வருவதாக உறுதியளித்துள்ளனராம்.
ஆனால் அஜீத், விஜய் போன்றவர்கள் இதுவரை கலந்து கொள்வதாக உத்தரவாதம் தரவில்லையாம். ரஜினியும், கமலும் இந்தக் கலைவிழாவில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று முன்னர் கூறப்பட்டது. ஆனால் ரஜினி வருவதாக ஒப்புதல் தந்துள்ளாராம். அதேபோல கமலும் வருவதாக கூறியுள்ளாராம்.
இதுகுறித்து சரத்குமார் கூறுகையில், கடந்த வாரம் தான் ரஜினி இதுகுறித்துப் பேசினார். தான் நிச்சயம் வருவதாக அவர் உறுதியளித்துள்ளார் என்றார்.
ஆனால் பெரும்பாலான கலைஞர்கள் அந்தக் காரணம், இந்தக் காரணம் என்று கூறி டபாய்க்கப் பார்க்கிறார்களாம். இதையடுத்து இது கதைக்கு ஆகாது, வருவீங்களா, வர மாட்டீங்களா, வரலைன்னா உன் பேச்சு கா என்ற பாணிதான் சரி என்று முடிவு செய்த நடிகர் சங்கம் அதிரடி முடிவை எடுத்துள்ளது.
அதன்படி கலை விழாவில் அனைவரும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும். அப்படிக் கலந்து கொள்ளாதவர்களுக்கு ரெட் கார்டு போடப்படும். அவர்களின் படங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கப்பட மாட்டாது என்று நடிகர் சங்கம் எச்சரித்துள்ளது.
கலை விழாவில் கலந்து கொண்டு ஒத்துழைப்பு நல்குமாறு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், தொழிலாளர் சங்கமான ஃபெப்சி ஆகியோருக்கும் சரத்குமார் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுவரை நடந்திராத அளவுக்கு மிகப் பிரமாண்டமாக இந்த விழாவை நடத்த சரத்குமார் ஆர்வமாக உள்ளாராம்.


Click it and Unblock the Notifications











