ட்ராப் ஆன ஷங்கர்-ஷாருக்கின் ரோபோ!
| Click here for more images |
சிவாஜியை முடித்த கையோடு தனது அடுத்த படத்தில் அமர்ந்து விட்டார் ஷங்கர். தனது நீண்ட நாளைய கனவான ரோபோட் படத்தை எடுக்க அவர் தீர்மானித்துள்ளதாக தட்ஸ்தமிழ்தான் முதன் முதலில் செய்தி வெளியிட்டது. பின்னர் இதை ஷங்கர் உறுதிப்படுத்தினார்.
ஆரம்பத்தில் இந்தப் படத்தில் கமல்ஹாசனை நடிக்க வைக்க யோசித்திருந்தார் ஷங்கர். பின்னர் அது கைவிடப்பட்டது. 3 மாதங்களுக்கு முன்பு மறுபடியும் ரோபோட்டை கையில் எடுத்தபோது அஜீத்தை நடிக்க வைக்க தீர்மானித்தார் ஷங்கர். ஆனால் பின்னர் அதுவும் மாறியது.
பின்னர் ஹ்ருத்திக் ரோஷன் நடிக்கப் போவதாக கூறப்பட்டது. கடைசியில் அதுவும் மாறி இறுதியாக ஷாருக்கான் நடிக்கப் போவது உறுதியானது. படத்தை அவரே தயாரிப்பதாகவும் கூறப்பட்டது. இதையும் ஷங்கர் உறுதி செய்தார்.
இந்தப் படத்தை மிகப் பிரமாண்டமாக அதாவது ரூ. 100 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கவும் ஷங்கர், ஷாருக்கான் திட்டமிட்டனர். இந்தப் படத்தில் நடிப்பதற்காக தனது பிற படங்களைக் கூட ஒத்திவைத்தார் ஷாருக் கான். அனைத்துப் படங்களுக்கான கால்ஷீட்டையும் ரோபோட்டுக்கு ஒதுக்கிக் கொடுத்தார்.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது என்ன நடந்ததோ தெரியவில்லை, ரோபோட் படம் கைவிடப்பட்டு விட்டது.
படத்தின் நலனைக் கருதி இருவரும் பிரிந்து விடலாம் என ஷங்கரும், ஷாருக் கானும் தீர்மானித்து விட்டார்களாம். இதுகுறித்து ஷாருக்கான் நேற்று கூறுகையில், ரோபோட் படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்தது. ஷங்கர் என்னிடம் கதையைச் கூறியபோது இது எனக்கான கதை என்று உணர்ந்தேன்.
இப்படி ஒரு கதையை ஹாலிவுட்டில்தான் எடுப்பார்கள். ஆனால் கதையில் சில மாற்றங்களை ஷங்கர் செய்துள்ளார். இதனால் நான் எதிர்பார்த்தது போன்ற ஹாலிவுட் எபக்ட் கிடைக்காது என்று உணர்ந்தேன். அதனால்தான் படத்திலிருந்து விலகத் தீர்மானித்தேன் என்றார் ஷாருக்கான்.
ஷாருக்கான் திடீரென விலகி விட்டதால் ரோபோட் படத்தை யாரை வைத்து ஷங்கர் இயக்குவார் என்ற இன்னொரு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஹிருத்திக் ரோஷனா இல்ல நம்ம 'சீயானா'!!?


Click it and Unblock the Notifications











