தயாரிப்பாளர் ஆகிறார் சிம்ரன்!
யாரும் நடிக்க கூப்பிட மாட்டேன் என்பதால் கடுப்பாகிப் போன சிம்ரன் சொந்தப் படம் தயாரிக்க முடிவு செய்துள்ளார். அதில் அவர்தான் நாயகியாம். பரத்தான் ஹீரோவாம்.
கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் தமிழ் திரையுலக ரசிகர்களை தனது கிக் ஆட்டத்தாலும், நச் நடிப்பாலும் அசத்தி வந்தவர் சிம்ரன். ஆனால் கல்யாணத்திற்குப் பிறகு சிம்ரன் மீண்டும் நடிக்க ஆசைப்பட்டபோது கோலிவுட் அவரை லூஸில் விட்டு விட்டது.அதற்குக் காரணம், தனது கல்யாணத்துக்கு கோலிவுட்டைச் சேர்ந்த யாரையும் அழைக்கவில்லை சிம்ரன். இயக்குநர் எஸ்.ஜே.சூர்யாவை மட்டும்தான் அழைத்திருந்தார். இதனால் சிம்ரன் மீது கடுப்பாகி விட்டது கோலிவுட்.
இருந்தாலும் அதையும் மீறி சில தயாரிப்பாளர்கள் சிம்ரனை தங்களது படங்களில் நடிக்க அழைத்தனர். ஆனால், கூடவே எனது கணவருக்கும் ஹீரோ வாய்ப்பு தர வேண்டும், பெரிய சம்பளம் தர வேண்டும் என ஏகப்பட்ட பந்தாக்களை செய்ய ஆரம்பித்ததால் சிம்ரனை சீ போ என்று ஒதுக்கி வைத்து விட்டனர் தயாரிப்பாளர்கள்.
இதனால் மறுபடியும் தமிழில் ரீ என்ட்ரி கொடுக்க முடியாமல் திக்கித் திணறி வருகிறார் சிம்ரன். கடைசியாக பாக்யராஜுடன் ஜோடி போடும் வாய்ப்பு மட்டுமே அவருக்குக் கிடைத்தது. சமீபத்தில் மலையாளத்தில் ஹீரோயினாக நடிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது (படத்தின் பெயர் ஹார்ட் பீட்).
பொறுத்தது போதும், பொங்கி எழு மங்கம்மா கதையாக, தமிழில் வாய்ப்பு தேடி தேடி அலுத்துப் போன சிம்ரன் இப்போது தானே ஒரு படத்தைத் தயாரித்து நடிக்க முடிவு செய்து விட்டார்.
சிம்ரன் தயாரிக்கப் போகும் படத்தில் பரத் ஹீரோவாம். சிம்ரன் ஒரு நாயகி. கூடவே ரீமா சென்னை இன்னொரு நாயகியாக்க முடிவு செய்துள்ளார். தனது முதல் தயாரிப்பை எப்படி சிறப்பாக அரங்கேற்றலாம் என்பது குறித்து தனது மனம் கவர்ந்த இயக்குநர் எஸ்.ஜே.சூர்யாவிடம் ஆலோசனை கேட்டுள்ளாராம் சிம்ரன்.
இதுகுறித்து சிம்ஸை பிடித்து கேட்டபோது, நான் இப்போது மலையாளப் படத்தில் பிசியாக இருக்கிறேன். தெலுங்குப் படம் ஒன்றிலும் நடிக்கவுள்ளேன். தமிழிலும் எனக்கு வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் எதுவுமே என்னைக் கவரவில்லை (அடடே).
சில திட்டங்களை வைத்துள்ளேன். சொந்தமாக படம் தயாரிப்பேனா என்பதை இப்போது சொல்ல முடியாது. ஆனால் விரைவில் என்னிடமிருந்து சில அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம் என்றார் புன்னகையுடன்.


Click it and Unblock the Notifications











