வெள்ளிவிழா கொண்டாடும் பாடகர் மனோ!

இந்த வெள்ளிவிழா ஆண்டில் அவரைக் கவுரவிக்கிறது சாதகப் பறவைகள் இசைக்குழுவும் கல்யாணகல்பா நிறுவனமும்.
மனோவை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் இசைஞானி இளையராஜா. பூவிழி வாசலிலே படத்தில் இடம்பெற்ற அண்ணே அண்ணே நீ என்னா சொன்னே... என்பதுதான் இவர் முதலில் பாடி பாட்டு.
இந்த ஒரே பாட்டில் அவர் பிரபலமாகிவிட்டார். தொடர்ந்து ரஜினிக்கு வரிசையாக பாடும் அளவுக்கு முன்னணிக்கு வந்தார். ரஜினி மட்டுமல்லாது, கமல், சத்யராஜ், கார்த்திக், பிரபு என அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் அவர் பாடிவிட்டார். அத்தனை இசையமைப்பாளர்களுடனும் அவர் பணியாற்றினாலும், இசைஞானி இளையராஜா இசையில்தான் இவர் அதிகம் பாடியுள்ளார்.
பாடுவதோடு நில்லாமல், சில படங்களில் நடிக்கவும் செய்தார். குறிப்பாக கமல்ஹாஸனுடன் சிங்காரவேலன் படத்தில் இவரும் கவுண்டமணியும் சேர்ந்து அடித்த லூட்டியை மக்கள் ரொம்பவே ரசித்தார்கள்.
இதுதவிர, 250 நாடகங்களிலும், 3000 மேடை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். மனோவின் 25 வருட கலையுலகப் பயணத்தை கவுரவிக்கும் வகையில சாதகப் பறவைகள் சங்கர் மற்றும் கல்யாண கல்பா நிறுவன நிர்வாக இயக்குநர் ராதிகா ஆகியோர் இணைந்து ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
சாதகப் பறவைகள் குழுவினர் நடத்தும் இந்த நிகழ்ச்சியில் முழுக்க முழுக்க மனோ பாடும் பாடல்கள் இடம்பெறவிருக்கின்றன.
திரையுலக நட்சத்திரங்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள் பலரும் இதில் பங்கேற்று மனோவை வாழ்த்துகின்றனர்.
ஜனவரி 26-ம் தேதி சென்னை காமராஜர் அரங்கில் மாலை 6 மணிக்கு நிகழ்ச்சி நடக்கிறது.


Click it and Unblock the Notifications











