நடிப்பு சக்கரவர்த்தி சிவாஜி கணேசனின் 15வது நினைவு தினம்.. சிம்ம குரலோன் பற்றி ஒரு சிறப்பு பதிவு!
சென்னை: 'நடிகர் திலகம்', 'நவரசத் திலகம்', 'சிம்மக்குரல் கணேசன்', 'பத்மஸ்ரீ கணேசன்' என பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் நடிகர் சிவாஜி கணேசனின் 15வது நினைவு தினம் இன்று.
1952ம் ஆண்டு பராசக்தி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான சிவாஜி கணேசன் தனது நடிப்பாலும் வசன உச்சரிப்பாலும் இன்றுவரை தமிழக மக்களின் மனதில் தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்திருக்கிறார்.
நடிகர் திலகம், சிவாஜி கணேசனின் 15வது நினைவு தினமான இன்று அவருக்கு பெரும் பெயரை ஈட்டி தந்த சில திரைப்படங்களை பற்றிய ஒரு பருந்து பார்வை இதோ:

பராசக்தி
1952ம் ஆண்டு 'பராசக்தி' படத்தின் மூலம் அறிமுகமானார் சிவாஜி கணேசன். 'சக்சஸ்' என்று கூறிய அவரது முதல் வசனத்தை போலவே, படத்தின் ரிசல்ட்டும் அமைந்தது. அவரின் வாழ்க்கையையும் சக்சஸ் ஆக்கியது.

300 படங்கள்
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என தனது வாழ்நாளில் சுமார் 300 படங்கள் வரை நடித்திருக்கிறார். தமிழில் கடைசியாக சிவாஜி கணேசன் நடித்த படம் 'பூப்பறிக்க வருகிறோம்'.

சுதந்திரப் போராட்ட வீரர்
வீரபாண்டிய கட்டபொம்மன் தொடங்கி திருப்பூர் குமரன் வரை தமிழின் அனைத்து சுதந்திரப் போராட்ட வீரர்களின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த பெருமை சிவாஜியையே சேரும். குறிப்பாக இவர் வீரபாண்டிய கட்டபொம்மனில் பேசிய 'வரி, வட்டி, கிஸ்தி' வசனம் இன்றைய இளைய தலைமுறையினரிடமும் பிரபலமாக உள்ளது.

நேரம் தவறாமை
தனது வாழ்நாளில் சிவாஜி ஒருமுறை கூட படப்பிடிப்புக்கு தாமதமாக சென்றதில்லையாம். இதுகுறித்து நடிகர் சிவகுமார் கூறுகையில், சிவாஜியைவிட முன்னதாக செல்ல வேண்டும் என 'ராஜராஜ சோழன்' படப்பிடிப்புக்கு நான் முன்னதாகவே சென்று காத்திருப்பேன். இதனைப் பார்த்து நான் கார்ல வந்தா நீ பிளைட்ல வர்றியா? என கிண்டலடிப்பார் என்று அவரின் நேரந்தவறாமை குறித்து பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

ரஜினி -கமல்
ரஜினியின் 'படையப்பா', கமலின் 'தேவர் மகன்' படங்களில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். ரஜினி, கமலுக்கு அடுத்து சிவாஜியுடன் நடிக்கும் அதிருஷ்டம் 'ஒன்ஸ்மோர்' படத்தின் மூலம், விஜய்க்கு கிடைத்தது. சிம்ரன்-விஜய் நடித்திருந்த இப்படத்தில் சிவாஜி, சரோஜாதேவி இணைந்து நடித்திருந்தார்கள்.

விருதுகள்
தேசிய விருது, பத்மபூஷன் விருது, செவாலியர் விருது, தாதா சாகேப் பால்கே விருது மற்றும் கலைமாமணி உட்பட ஏராளமான விருதுகளை தனது வாங்கி இருக்கிறார். 2001 ம் ஆண்டு இதே நாளில் சிவாஜி கணேசன் இறந்தபோது தமிழ்நாடே ஸ்தம்பித்தது. அந்தளவு தமிழர்களின் வாழ்வில் தனது நடிப்பால் இரண்டறக்கலந்து விட்டிருந்தார்.
சிவாஜியின் இறுதி ஊர்வலத்தில் ரசிகர் ஒருவர் இருந்த ஒரு நடிகனும் இறந்துவிட்டாரே.. என்று அழுதாராம்...உண்மைதான்..


Click it and Unblock the Notifications











