85வது பிறந்தநாள்: மறக்க முடியுமா சிவாஜி கணேசனை!
சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 85வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
தமிழ் சினிமாவுக்கு கிடைத்த அரிய பொக்கிஷம் தான் சிவாஜி கணேசன். காதல், வீரம் என்று நவரசங்களையும் அழகுற தனது முகத்தில் காட்டியவர் சிவாஜி.
திரை உலகம் உள்ள வரை சிவாஜி கணேசனின் பெயரும் நிலைத்து நிற்கும். விழுப்புரம் சின்னையாப்பிள்ளை கணேசனாக பிறந்த அவர் திரை உலகில் சிவாஜி கணேசன் ஆனார்.

85வது பிறந்தநாள்
நடிப்பில் சக்ரவர்த்தியான சிவாஜியின் 85வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

பராசக்தி
திமுக தலைவர் கருணாநிதி திரைக்கதை, வசனம் எழுதிய பராசக்தி படம் சிவாஜிக்கு பெயரும், புகழும் வாங்கிக் கொடுத்தது.

வீரபாண்டிய கட்டபொம்மன்
ஆங்கிலேயருக்கு வட்டி கட்ட மறுத்த வரலாற்று புருஷரான வீரபாண்டிய கட்டபொம்மனின் பெயரைக் கேட்டால் நம் நினைவுக்கு வருபவர் சிவாஜி தான். வானம் பொழிகிறது பூமி விளைகிறது உனக்கேன் கொடுக்க வேண்டும் கிஸ்தி. நீ எங்களோடு வயலுக்கு வந்தாயா, நாற்று நட்டாயா இல்லை கொஞ்சி விளையாடும் எம் குலப் பெண்களுக்ககு மஞ்சள் அரைத்தாயா என்ற இந்த வசனம் இன்றளவும் பிரபலம்.

மகாகவி பாரதி
மகாகவி பாரதி என்றாலும் நம் நினைவுக்கு வருபவர் சிவாஜியே.
சிந்து நதியின் மிசை நிலவினிலே
சேரநன்னாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து
தோணிகளோட்டி விளையாடி வருவோம்
சிந்து நதியின் மிசை நிலவினிலே
சேரநன்னாட்டிளம் பெண்களுடனே என்ற பாடலுக்கு சிவாஜியின் முகபாவணையை மறக்க முடியாது.

நவராத்திரி
நவராத்திரி படத்தில் சிவாஜி 9 கதாபாத்திரங்களில் வந்து அசத்தி இருப்பார்.

வசந்த மாளிகை
வசந்த மாளிகை படத்தில் சிவாஜி பாடும் யாருக்காக இது யாருக்காக என்ற பாடல் இன்றும் கூட பிரபலம்.

தங்கப் பதக்கம்
போலீஸ் அதிகாரியாக நடித்த சிவாஜி கடமை தான் முக்கியம் என்று திருடனான தனது மகனையே சுட்டுக் கொல்வார்.

முதல்மரியாதை
முதல்மரியாதை படத்தில் வயதான சிவாஜி ராதாவை காதலிப்பார். பூங்காற்று திரும்புமா என் பாட்ட விரும்புமா தாலாட்ட மடியில் வெச்சுப் பாராட்ட எனக்கொரு தாய் மடி கெடைக்குமா என்ற பாடல் என்றும் இனியவை.

பத்மினி, கே.ஆர். விஜயா
சிவாஜி கணேசனுக்கு பொருத்தமான ஜோடி என்றால் அது பத்மினியும், கே. ஆர். விஜயாவும் என்றே கூறலாம்.

சிவாஜி மறைவு
கடந்த 2001ம் ஆண்டு ஜூலை 21ம் தேதி தனது 72வது வயதில் சிவாஜி கணேசன் மரணம் அடைந்தார். அவரது இறுதி ஊர்வலத்தில் கடலாக மக்கள் கலந்து கொண்டனர்.

மகன் பிரபு
அப்பா சிவாஜி வழியில் மகன் பிரபு நடிகராகி திரை உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். அப்பாவும், மகனும் சேர்ந்தே பல படங்களில் நடித்துள்ளனர்.

பேரனும் கூட
பிரபுவின் மகன் விக்ரம் பிரபுவும் நடிக்க வந்துவிட்டார். முதல் படமான கும்கியிலேயே பெயரும், புகழும் வாங்கிவிட்டார்.


Click it and Unblock the Notifications











