வரி....வட்டி...கிஸ்தி... யாரைக் கேட்கிறாய் வரி: மறக்க முடியுமா, அந்த நடிகர் திலகத்தை!
சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 89வது பிறந்தநாளான இன்று அவரின் மணிமண்டபம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமா இருக்கும் வரைக்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பெயரும் நிலைத்து நிற்கும். சினிமாவில் நடிக்க வருபவர்கள் சிவாஜியின் வசனங்களை பேசியே பயிற்சி எடுக்கிறார்கள்.
சிவாஜியின் கண்களே கதை பேசும்.

பிறந்தநாள்
நடிகர் திலகத்தின் 89வது பிறந்தநாள் இன்று. இந்த நாளில் சென்னை அடையாறில் கட்டப்பட்டுள்ள சிவாஜி மணிமண்டபத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் திறந்து வைத்தார்.

திரண்ட திரையுலகம்
சிவாஜி கணேசனின் மணிமண்டப திறப்பு விழாவில் ரஜினிகாந்த், கமல் ஹாஸன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் திரையுலகை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

வீர பாண்டிய கட்டபொம்மன்
நிஜத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் எப்படி இருந்தார் என்பது பலருக்கும் தெரியாது. ஆனால் வீரபாண்டிய கட்டபொம்மன் என்றதுமே அந்த கதபாத்திரத்தில் நடித்த சிவாஜி தான் நம் நினைவுக்கு வருகிறார்.

வரி வட்டி கிஸ்தி
வரி....வட்டி...கிஸ்தி... யாரைக் கேட்கிறாய் வரி! எதற்கு கொடுக்க வேண்டும் கிஸ்தி!
எங்களோடு வயலுக்கு வந்தாயா! நாற்று நட்டாயா!
களை பறித்தாயா! ஏற்றம் இறைத்து நெடுவயல் பாயக்கண்டாயா!
அல்லது அங்கே கொஞ்சி விளையாடும் எம் குலப் பெண்களுக்கு மஞ்சள் அரைத்துப் பணிபுரிந்தாயா!
மாமனா! மச்சானா! மானங்கெட்டவனே! என்று வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் சிவாஜி பேசிய வசனம் இன்றும் யாராலும் மறக்க முடியாத வசனமாக உள்ளது.

சக்சஸ்
தனது முதல் படமான பராசக்தியில் சக்சஸ் என்று வசனத்தை முதன்முதலாக பேசினார் சிவாஜி. அவரின் முதல் வசனமே அவரது திரையுலக பயணத்தை விவரிக்கும் வார்த்தையாக அமைந்துவிட்டது.

நவரசம்
முகத்தில் நவரசமும் காட்டுவார் சிவாஜி. அழுது கொண்டே சிரிப்பதும், சிரித்துக் கொண்டே அழுவதும் அவருக்கு நிகர் அவர் தான் என்று சொல்ல வேண்டும். சிவாஜி கணேசன் மறைந்தாலும் அவர் நடிப்பால் என்றும் நம் நினைவில் இருக்கிறார், இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











