ஸ்பைடர் மேன்-3 சூப்பர் ஹிட்
சின்னஞ்சிறார்களை மட்டுமல்ல பெரியவர்களையும் சேர்த்துக் கவர்ந்து விட்டது ஸ்பைடர் மேன்3.
கோடைகால விடுமுறையையொட்டி ஆங்காங்கே அலைந்து கொண்டிருக்கும் சிறுவர்களைக் குறி வைத்து ஸ்பைடர்மேன்3 படத்தை வெளியிட்டுள்ளனர்.இந்தப் படத்துக்காக தமிழகத்தில் மொத்தம் 95 பிரிண்டுகள் போட்டுள்ளனராம். அதில் தமிழில் மட்டும் 78 பிரிண்டுகளாம். ஒரு ஹாலிவுட் படத்துக்கு இத்தனை பிரிண்ட்டுகள் போட்டது இதுவே முதல் முறையாம்.
தமிழ், ஆங்கிலம் தவிர இந்தி, மலையாளம், தெலுங்கு என மொத்தம் 588 பிரிண்டுகள் போடப்பட்டுள்ளதாம். சென்னையில் மட்டும் 10 தியேட்டர்களில் இப்படத்தைத் திரையிட்டுள்ளனர்.
படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் திரையிட்ட தியேட்டர்களில் எல்லாம் கூட்டம் அலை மோதுகிறது. சென்னையில் மட்டுமல்லாது தமிழகம் முழுதும் படம் சூப்பர் ஹிட் ஆகியுள்ளதாம்.
படத்தை இந்தியாவில் திரையிட்டுள்ள சோனி பிக்சர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் உதய் சிங் இதுகுறித்துக் கூறுகையில், உலகெங்கும் திரையிட்ட இடங்களில் எல்லாம் இப்படம் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. இந்தியாவிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. எதிர்பாராத அளவுக்கு வசூலும் கிடைத்துள்ளது.
இப்படம் இந்தியாவில் 65 கோடி லாபத்தை ஈட்டும் என எதிர்பார்க்கிறோம். இதுவரை ஆங்கிலப் படம் ஒன்று இந்த அளவுக்கு வசூலை ஈட்டியதில்லை என்பது குறிப்பிடத்தகத் என்றார்.
இதற்கு முன்பு தமிழகத்தில் டைட்டானிக் படத்துக்கு மட்டும்தான் அதிக வரவேற்பு கிடைத்தது. இப்போது அதை ஸ்பைடர் மேன் பீட் செய்து விடும் எனக் கூறப்படுகிறது.
பசங்களோட, பறந்து பறந்து போய் படத்தைப் பாருங்கய்யா!


Click it and Unblock the Notifications











