"தேவதை அமலாவை காரில் அழைத்து வருவார்..பொறாமையாக இருக்கும்..சுரேஷ் சக்கரவர்த்தி குறித்து இளவரசு"
சென்னை: அண்மையில் வெளியான நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தில் நடிகர் இளவரசுவும், நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தியும் இணைந்து நடித்திருப்பார்கள்.
அத்திரைப்படத்தில் இந்த இருவரின் நடிப்பும் பேசப்படும் அளவிற்கு மிகச் சிறப்பாக இருந்தது.
இந்நிலையில், சுரேஷ் சக்கரவர்த்தியுடனான பழைய நினைவுகளை சுவாரசியமாக நன்றி விழாவில் பகிர்ந்துள்ளார் இளவரசு.

தேவதை அமலாவை காரில்
"சுரேஷ் சக்கரவர்த்தியை எனக்கு எப்படி அறிமுகம் என்றால், தமிழ் சினிமாவில் டி.இராஜேந்தரால் அறிமுகம் செய்யப்பட்ட தேவதை அமலாவை படப்பிடிப்பிற்குக் காரில் அழைத்து வருவான். பார்ப்பதற்கே பொறாமையாகவும், வயிற்றெரிச்சலாகவும் இருக்கும். யாருடா இவன் என்று தான் நாங்கள் எல்லோரும் பார்ப்போம். இங்கிலீஸ் தான் பேசுவான்.அதன் பின்னர், திரைப்படம் ஒன்றில் கதாநாயகனாக நடித்தான். அந்தப் படம் சரியாக ஓடவில்லை. பின்னர் சன்டிவியில் வேலை செய்து ஆஸ்திரேலியா சென்று விட்டான். அங்கிருந்து நான் நடித்த படங்கள் குறித்து தொலைப்பேசியில் அழைத்து பாராட்டுவான். அது பாராட்டா அல்லது வயிற்றெரிச்சலா என்று தெரியாது" - இவ்வாறு இளவரசு தெரிவித்தார்.

ஒரே சீனில் தூக்கி சாப்பிட்டான்
நெஞ்சுக்கு நீதி படத்தில் ஒரு சீனில் பெட்ரோல் குண்டு வெடித்தது குறித்து சுரேஷ் என்னிடம் விசாரிப்பான். பின்னர் நடந்து சென்று அதிகாரியிடம், "சார் இதுல ஒரு கையெழுத்து மட்டும் போட்டுட்டேள்னா" என்பான். அந்தக் காட்சியில் நடித்தவுடனேயே அவனிடம் சொன்னேன். எங்க எல்லாரையும் தூக்கி சாப்பிட்டுவிட்டாய் என்று. "அட போடா.. நான் படுற கஷ்டம் எனக்குத் தானே தெரியும்" என்றான். அதன் பிறகு, இன்னொரு சீனில் என் சட்டையைப் பிடித்து உலுக்குவான். அதற்கு நான் என் எதிர்ப்பைக் காட்டுவது போல் நடித்தேன். ஆனால் இயக்குநர் அருண்ராஜ், அந்த கேரக்டர் தனது எதிர்ப்பை உடல்மொழியில் காட்டவே மாட்டான் என்று சொல்லி என் நடிப்பை மாற்றினார் என்றும் இளவரசு தெரிவித்தார்.

உதயநிதியை சிறுவனாகப் பார்த்தேன்
"தயாரிப்பாளர் மற்றும் நடிகராகத் தன்னை கட்டமைத்திருக்கும் உதயநிதி ஸ்டாலின் மீது திருவாரூரிலிருந்து திருவல்லிக்கேணி வரை மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்திருக்கும். இந்த கேரக்டரில் அவர் எப்படி நடித்திருக்கிறார் என்று. ஆனால் அத்தனை பேரின் எதிர்பார்ப்பையும் இத்திரைப்படத்தில் திருப்திபடுத்தியிருக்கிறார். பல வருடங்களுக்கு முன் கிறுக்கல்கள் என்ற கவிதைத் தொகுப்பை பார்த்திபன் வெளியிட்டார். அவ்விழாவிற்கு அன்றைய முதலமைச்சர் கலைஞர், துணை முதலமைச்சர் ஸ்டாலின் இருவரும் வந்திருந்தார்கள். அப்போது உடன் ஒரு சிறுவனை அழைத்து வந்திருந்தார்கள். அந்த சிறுவன் தான் உதயநிதி. இன்று தன்னை ஒரு தயாரிப்பாளராகவும், நடிகராகவும் அவர் நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார்" - என்றும் உதயநிதி குறித்து இளவரசு தெரிவித்தார்.

மன்னிப்பு கேட்ட இளவரசு
நெஞ்சுக்கு நீதியில் இயக்குநர் அருண் ராஜா கேட்ட விஷயங்களை படத்தின் டப்பிங்கில் கொடுக்க முடியாமல் போனதற்கு விழா மேடையில் மன்னிப்புக் கேட்டார் இளவரசு. அந்த அளவிற்கு படத்தில் உள்ள கதாப்பாத்திரங்களுக்கும், அவர்களின் வசனங்களுக்கும் உளவியல் ரீதியில் அணுகி செதுக்கியிருக்கிறார் இயக்குநர் அருண் ராஜா காமராஜ். நெஞ்சுக்கு நீதி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











