தமிழ் சினிமா 2017... ஒரு பார்வை! - ஒன்இந்தியா ஸ்பெஷல்
Recommended Video

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் 2017 ஜனவரி முதல் டிசம்பர் 29 வரையிலான நாட்களில் 200 நேரடி தமிழ் திரைப்படங்களை இவ்வருடம் வெளியிட்டிருக்கின்றனர்.
இது கடந்த ஆண்டை காட்டிலும் அதிகம். சராசரியாக 43 மணி நேரத்திற்கு ஒரு திரைப்படம் என கணக்கிட்டால் 200 படங்கள் வருகிறது.

உலகில் அதிகமான திரைப்படங்களை தயாரிப்பதும், வெளியிடுவதும் மொழி அடிப்படையில் கணக்கிட்டால் தமிழ் என்று கூறி பெருமைப்படலாம்.
அதே போல் எந்தவித திட்டமிடலும் இன்றி, இலக்கு இன்றி அனுபவமில்லாதவர்களால் இஷ்டத்துக்கு படம் தயாரித்து, ஒவ்வொரு வருடமும் பெருமளவில் நஷ்டத்தைச் சந்திப்பதை வாடிக்கையாக கொண்டிருப்பதும் தமிழ் திரையுலகம்தான்.
வெளியான 200 படங்களில் வசூல் அடிப்படையில் சூப்பர் ஹிட், ஹிட், ஆவரேஜ், அசலை நெருங்கிய படங்கள் 20 % சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது.
இந்த அளவு ஒவ்வொரு வருடமும் தொடர்கிறது. முந்தைய ஆண்டுகளின் அனுபவ படிப்பினையில் இருந்து குறைகளை களைந்து நஷ்டங்களை களைய எந்தவொரு முன்முயற்சியையும் தயாரிப்பாளர்கள் எடுக்கவில்லை.
ரீலீஸ் செய்யப்படும் படங்களில் 80% சதவீதமான படங்கள் புதிய தயாரிப்பாளர்களால் தயாரிக்கப்படுகின்றன. படம் வெளியான பின் வெற்றி பெற்றால் தொடர்ந்து படத்தயாரிப்பில் ஈடுபடுகின்றனர். தோல்வி அடைந்தால் தொழிலை விட்டு பழைய தொழிலுக்கு சென்று விடுகின்றனர்.
சராசரியாக 100 முதல் 125 படங்கள் மட்டும் வெளியான தமிழ் திரையுலகில் கடந்த சில வருடங்களாக அதிக படங்கள் ரீலீஸ் ஆனதற்கு காரணம் என்ன?
ரியல் எஸ்டேட் அதிபர்கள் திரைப்பட தயாரிப்பில் ஈடுபட்டு கறுப்பு பணத்தை வெள்ளையாக்கும் முயற்சியில் ஈடுபட்டது ஒரு முக்கிய காரணம்.
கதாநாயகன் ஆக வேண்டும், இயக்குநர் ஆக வேண்டும் என்ற கனவுகளுடன் வரும் புதியவர்களுக்கு உடனடியாக வாய்ப்பு வசப்படுவதில்லை. இதனால் வசதி படைத்தவர்கள் சொந்த முதலீட்டில் படம் தயாரிப்பதும், படங்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் காரணமாகி விடுகின்றன.
தமிழ் சினிமாவில் பாரம்பர்யம் மிக்க தயாரிப்பு நிறுவனங்கள் கடந்த பல வருடங்களாக படத் தயாரிப்பில் ஈடுபடுவதை நிறுத்திக் கொண்டுவிட்டனர். தொடர்ந்து படத்தயாரிப்பில் ஈடுபடுவது வி கிரியேஷன்ஸ், சூப்பர் குட் பிலிம்ஸ், தேனாண்டாள் பிலிம்ஸ், சத்ய ஜோதி பிலிம்ஸ் என சில நிறுவனங்கள் மட்டுமே. கடந்த 25 ஆண்டுகளைக் கடந்து படத்தயாரிப்பில் இருக்கும் நிறுவனங்கள் இவை. தற்போதுள்ள முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் அனைத்தும் கால் நூற்றாண்டுக்குட்பட்ட நிறுவனங்கள்.
முன்ணனி நடிகர்கள் தங்கள் சம்பளத்தை அதிகரித்துக் கொள்ள முதல் பிரதி அடிப்படையில் படத்தயாரிப்பில் ஈடுபட்டிருப்பதும் பட எண்ணிக்கை அதிகரிக்கக் காரணமாகிறது.
அவ்வாறு நடிகர்கள் தயாரித்த எந்த படமும் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெறவில்லை. ஆனால் அவர்களது சம்பளம் மட்டும் கோடிக்கணக்கில் அதிகரித்திருக்கிறது.
இதனால் பல தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் கோடிக்கணக்கில் நஷ்டமடைந்து தொடர்ந்து தொழில் செய்ய முடியாமல் முடங்கிப் போனவர்கள் அதிகம்.
இந்த ஆண்டு வெளியிடப்பட்ட திரைப்படங்களின் தயாரிப்பு, வெளியீடு ஆகியவற்றில் செய்யப்பட்ட முதலீட்டு தொகை சுமார் ரூ 1000 கோடி. இவற்றில் 40% சதவீத தொகையை தொலைக்காட்சி, ஆடியோ உரிமை, வெளிநாட்டு உரிமை, கேரளா, கர்நாடகா, வட இந்திய விநியோக உரிமைகளை வியாபாரம் செய்வதன் மூலம் கிடைக்க வேண்டும்.
எஞ்சிய 60 % சதவீத அசல் தமிழ்நாட்டில் படத்தை தியேட்டர்களில் ரீலீஸ் செய்யும் உரிமையை அவுட்ரேட் அடிப்படையில் விற்பனை செய்வதன் மூலம் கிடைக்க வேண்டும்.
அவ்வாறு வியாபாரம் செய்யப்பட்டு விநியோகஸ்தர், திரையரங்குகளுக்கு லாபகரமாக அமைந்த படங்கள் ஆறு படங்கள் மட்டுமே.
விநியோக அடிப்படையில் திரையிடப்பட்டு வெற்றி பெற்ற படங்கள் ஐந்து படங்கள் மட்டுமே. அவை என்ன? விவரங்கள் அடுத்தடுத்த கட்டுரைகளில்.
- நமது நிருபர்


Click it and Unblock the Notifications











