அழகிரி மகனும் டிவி ஆரம்பிக்கிறார்!

சில மாதங்களுக்கு முன்பு கேப்டன் டிவியைத் தொடங்கினார் விஜயகாந்த். அடுத்து கலைஞர் டிவி குழுமத்திலிருந்து சித்திரம் டிவி வரப் போகிறது. இந்த நிலையில், அழகிரி மகன் தயாநிதியும் ஒரு டிவியை தொடங்கப் போவதாக பேச்சு அடிபடுகிறது.
சமீபத்தில்தான் தயாநிதி அழகிரி, சென்னையில் ஒரு எம்.எஸ்.ஓவை தொடங்கினார். இந்த நிலையில் அவரும் சாட்டிலைட் சானல் களத்தில் குதிக்கவுள்ளார். தனது டிவிக்கு தயா டிவி என தயாநிதி பெயரிட்டுள்ளதாக தெரிகிறது. இதற்காக அலுவலகம் போட்டு வேலையையும் ஆரம்பித்து விட்டதாக பேசப்படுகிறது.
ஏற்கனவே மதுரையில் சுமங்கலி கேபிள் விஷனுக்குப் போட்டியாக ராயல் கேபிள் விஷனை அழகிரி தொடங்கினார். அதை அப்போது தயாநிதிதான் பார்த்துக் கொண்டார் என்று கூறப்பட்டது. அதுதான் தற்போது சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட எம்.எஸ்.ஓ.வாக உருமாறி வந்துள்ளது. இந்த நிலையில்தான் தயா டிவி குறித்த செய்திகள் கிளம்பியுள்ளன.
தயாநிதி ஏற்கனவே தயாரிப்பாளராகவும், வினியோகஸ்தராகவும் கோலிவுட்டைக் கலக்கிக் கொண்டிருக்கிறார். இவரது கிளவுட் நைன் மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் வெளியான வாரணம் ஆயிரம், தமிழ்ப்படம், பையா, ஆகியவை பெரும் வெற்றியைப் பெற்றன.
அஜீத் நடிப்பில் காவல், தூங்கா நகரம், பூச்சாண்டி, சிம்பு நடிப்பில் இரு படங்கள் என தயாரிப்பாளராக பிசியாக உள்ளார் தயாநிதி. இந்த நிலையில்,
சானல் களத்தில் இறங்கி மற்ற சானல்களை ஒரு கை பார்க்க தயாராகி விட்டார் தயா எனத் தெரிகிறது.
தயா டிவி வருவது உண்மை என்றால் அது, கருணாநிதி குடும்பத்திலிருந்து முளைக்கும் 3வது டிவி குழுமம் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே மாறன் குடும்பத்தார் சன் டிவியை நடத்தி வருகின்றனர். அதேபோல திமுக தரப்பிலிருந்து கலைஞர் டிவி செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது அழகிரி குடும்பத்திலிருந்து தயா டிவி வரவுள்ளது.


Click it and Unblock the Notifications











