புதுப் படங்களின் உரிமை உள்ளவற்றுக்காக ரூ. 100 கோடியை களம் இறக்குகிறது சன் டிவி குழுமம்.

இந்த நிதியில் பெரும் பகுதியை, புதிய திரைப்படங்களை வாங்கிக் குவிக்க பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாம் சன் டிவி.
இதுகுறித்து சன் நெட்வொர்க்கின் தலைமை நடவடிக்கை அதிகாரி அஜய் வித்யாசாகர் செய்தியாளர்களிடம் பேசுகையில், சன் நெட்வொர்க்கின் தற்போதைய வருவாயில் 60 சதவீதம் தமிழ் மற்றும் மலையாளம் சானல்கள் மூலமாக வருகிறது. 40 சதவீத வருவாய் தெலுங்கு மற்றும் கன்னட சானல்கள் மூலமாக கிடைக்கிறது.
இந்த சானல்களுக்குரிய கன்டென்ட் பலத்தை அதிகப்படுத்த வருவாய்க்கேற்ற வகையில் சம்பந்தப்பட்ட சானல்களுக்கான நிதியை ஒதுக்கவுள்ளோம். ரூ. 100 கோடி கன்டென்ட் இருப்பை அதிகப்படுத்த ஒதுக்கப்படவுள்ளது. இதில் பெரும்பாலான நிதி, புதிய திரைப்படங்களின் சாட்டிலைட் உரிமையை வாங்க பயன்படுத்தப் போகிறோம்.
தற்போது சன் குழுமத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் 20க்கும் மேற்பட்ட சானல்கள் உள்ளன. பொது, காமெடி, செய்தி, இசை மற்றும் பிற சானல்கள் இதில் அடக்கம்.
தென்னிந்திய டிவி சந்தையில், 60 முதல் 64 சதவீதத்தை சன் குழுமம் வைத்துள்ளது. இது 3 ஆண்டுகளுக்கு முன்பு 56 சதவீதமாக இருந்தது.
டிவி சானல்கள் தவிர இந்தியா முழுவதும் 43 எப்.எம். நிலையங்களும் சன் குழுமத்திடம் உள்ளன.
2010, மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில்,நிறுவனத்தின் நிகர லாபம் ரூ. 567.38 கோடியாக இருந்தது. இது கடந்த நிதியாண்டில் ரூ. 437.11 கோடியாக இருந்தது.
நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ. 1437.52 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இது ரூ. 1091.52 கோடியாக இருந்தது.
விளம்பர வருவாய் 38 சதவீத வளர்ச்சியைக் கண்டதே நிறுவனத்தின் மொத்த வருவாய் பெருமளவில் உயரக் காரணம்.
தற்போது எங்களது நிறுவன வருவாயில் 60 சதவீதம் விளம்பரங்கள் மூலமாகவும், 40 சதவீதம் சப்ஸ்கிரிப்ஷன் மூலமாகவும் வருகிறது என்றார் வித்யாசாகர்.


Click it and Unblock the Notifications











