எப்பவும் அவரே ராஜா!
தமிழ் திரை இசையுலகில் வெறும் இசை உதவியாளனாய் நுழைந்து, இன்றும் உலகம் வியக்கும் இசை மேதையாகத் திகழும் இளையராஜாவுக்கு இன்று பிறந்த நாள்.
இன்று நாற்பதுகளில் இருக்கும் அத்தனை பேரின் வாழ்க்கையின் எல்லா தருணங்களிலும் கூடவே பயணித்துக் கொண்டிருப்பது இளையராஜாவின் இசைதான்.

அவரது இந்தப் பாடல் சிறந்தது.. இந்தப் பாடல் உயர்ந்தது... இந்த இசை அருமை என பிரித்துச் சொல்ல முடியாத அளவுக்கு அத்தனைப் பாடல்கள், இசைத் தொகுப்புகளிலும் ஜீவனிருக்கும்.
நெஞ்சத்தைக் கிள்ளாதே படத்தில் ஒரு பாடல். மம்மி பேரு மாரி... சரக்கடித்துவிட்டு கண்டபடி பாடும் பாடல்தான். ஆனால் ஒருமுறை கேட்ட பிறகு, திரும்பவும் கேட்கத் தூண்டும். காரணம், ஒரு டப்பாங்குத்து பாட்டுதானே என்று ஏனோதானோவென இசைக் கோர்க்கவில்லை அவர். அந்த சிரத்தையும் உயிரோட்டத்துடன் கூடிய இசையமைப்பும் நாற்பது ஆண்டுகளுக்கு மேலும் தொடர்கிறது இளையராஜாவிடம்.
இளையராஜா என்று சொன்னவுடன், இன்றைய தலைமுறையினர் பலரும் சக இசையமைப்பாளர்களுடன் அவரை ஒப்பிட ஆரம்பித்து, இஷ்டத்துக்கும் எழுதித் தள்ளுகிறார்கள். அதை தவறு என்று கூடச் சொல்ல மாட்டேன்... அறியாமை. அவரை, அவர் இசையைப் பற்றித் தெரிந்தால் அப்படி எழுதுவார்களா...
இளையராஜா மிகச் சிறந்த மனிதர். திரையுலகில் ராஜாவுக்கு நிகரான இசையமைப்பாளரும் இல்லை. அவரைப் போல இளம் இயக்குநர்கள், தயாரிப்பாளர்களுக்கு உதவியவர்களும் இல்லை. நல்ல கதை, திறமையான இயக்குநர் என்று வந்துவிட்டால், பணம் இரண்டாம் பட்சம்தான் அவருக்கு. 'அண்ணே... ரிகார்டிங்குக்கு பணமில்ல..' என்று தலைகுனிந்து நின்ற பல இயக்குநர்களை, 'வாய்யா பாத்துக்கலாம்' என்று ஆறுதல்படுத்தி காலத்தால் மறக்கப்பட முடியாத பல பாடல்களைத் தந்த மகா கலைஞர் இளையராஜா.
ஒவ்வொரு முறையும் இளையராஜா பற்றிய விமர்சனங்கள் வரும்போது, அவரைப் பற்றி அறியாமலேயே ஒரு நிலைப்பாட்டை எடுத்துவிட்டு, கடுமையாக வாதம் செய்வார்கள் சிலர். உண்மை புரிந்த பிறகு என்ன சொல்வதென்றே தெரியாமல் கள்ள மௌனம் காப்பார்கள். உதாரணம், எஸ்பி பாலசுப்ரமணியம் விவகாரம்.
எல்லா விமர்சனங்களின் இறுதியிலும் தராசு வழக்கமாக இளையராஜா பக்கமே சாய்ந்து நிற்கும். காரணமின்றி அவர் எதையும் செய்வதில்லை!


Click it and Unblock the Notifications











