அன்புத்தோழிக்கு ஓகே!!
தொல்.திருமாவளவன் நடித்துள்ள அன்புத்தோழி படத்துக்கு ஒரு வழியாக சென்சார் சான்றிதழ் கிடைத்து விட்டதாம். படத்தில் இடம் பெற்றிருந்த சர்ச்சைக்குரிய 9 காட்சிகளை நீக்க திருமாவளவன் ஒத்துக் கொண்டதால் அன்புத்தோழிக்கு விடுதலை கிடைத்துள்ளது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் முதல் முறையாக அரிதாரம் பூசி நடித்த படம் அன்புத்தோழி. புரட்சிக்காரன் வேடத்தில் திருமா நடித்துள்ள இப்படத்தில் ப்ரீத்தி வர்மா ஹீரோயினாக கலக்கியுள்ளார்.படம் முடிந்து சென்சார் சான்றிதழுக்காக அனுப்பப்பட்டது. படத்தைப் பார்த்த சென்சார் வாரிய உறுப்பினர்கள், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை புகழும் வகையில் இப்படத்தில் பல காட்சிகள் இருப்பதற்கு ஆட்சேபித்தனர். அவற்றை நீக்கினால்தான் சான்றிதழ் என்று கூறி விட்டனர்.
படத்தில் ஈழத் தமிழர்கள் நலனுக்காக பாடுபடும் போராளி வேடத்தில் நடித்துள்ளாராம் திருமா. படத்தின் சில காட்சிகளில், ஈழப் பிரச்சினையில் மத்திய அரசின் கொள்கையை விமர்சித்தும் வசனம் பேசியுள்ளாராம் திருமா. இதுதான் விவகாரமாகி விட்டது.
படத்திற்குத் தடை விதிக்கப்பட்டதால் அப்செட் ஆன திருமா, முதல்வர் கருணாநிதியை அணுகி உதவி கோரினார். அதற்கு முதல்வர் கருணாநிதி, சில காட்சிகளை நீக்கி விடலாமே என்று அறிவுரை கூறினாராம்.
அதை ஏற்றுக் கொண்டுள்ள திருமா. படத்தில் வரும் சர்ச்சைக்குரிய 9 காட்சிகளை நீக்க ஒப்புக் கொண்டுள்ளார். அதன்படி அந்தக் காட்சிகள் படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாம். இதையடுத்து சென்சார் வாரியமும் படத்துக்கு ஆட்சேபனை தெரிவிக்காமல் சான்றிதழ் வழங்க முடிவு செய்து விட்டதாம்.
பஞ்சாயத்து நீங்கி விட்டதால் படத்தை திரைக்குக் கொண்டு வரும் வேலையில் அன்புத்தோழி இயக்குநர் படு மும்முரமாக இறங்கியுள்ளார். ஆகஸ்ட் மாதம் படம் திரைக்கு வரக் கூடுமாம்.


Click it and Unblock the Notifications











