இரவு மூன்று மணிக்கு அழுது கொண்டே ஃபோனில் பேசிய வடிவேலு... தியாகு பகிர்ந்த உண்மை சம்பவம்
சென்னை: நடிகர் வடிவேலுவின் நகைச்சுவை காட்சிகளை ரசிக்காதவர் என்று எவருமே தமிழ்நாட்டில் இருக்க மாட்டார்கள். சினிமாவில் உள்ளவர்களே அவருக்கு மிக தீவிர ரசிகர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
அப்படிப்பட்ட வடிவேலு கடந்த 11 ஆண்டுகளாக எந்தத் திரைப்படங்களிலும் பெரிதாக ஜொலிக்கவில்லை. அதன் காரணம் சினிமாவை தாண்டி அரசியல் ரீதியாக நடிகர் விஜயகாந்தை அவர் விமர்சித்தது தான் என்பது பலரும் அறிந்தது.
அதற்கு முன்னர் அவர் கொடி கட்டி பறந்த காலத்தில் நடித்த காட்சிகளை தான் இன்றும் கூட இளைஞர்கள் மீம்ஸ்களுக்காக பயன்படுத்தி அவரின் நகைச்சுவையை இன்னும் உயிர்ப்பித்துக் கொண்டிருக்கின்றனர்.

நடிகர் தியாகு
இயக்குநர் T ராஜேந்தர் அவர்களின் முதல் படமான ஒரு தலை ராகம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகர்தான் தியாகு. அதன் பின்னர் பல்வேறு படங்களில் வில்லன், குணச்சித்திரம், காமெடி உள்ளிட்ட பல கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். நடிகர் வடிவேலுவின் நகைச்சுவை காட்சிகளில் இவரை அடிக்கடி பார்க்கலாம். சிங்கம் திரைப்படத்தின் அனைத்து பதிப்புகளிலும் ஒரு சிறிய கதாபாத்திரத்திலும் நடித்திருப்பார். இவர் நடிகர் வடிவேலு பற்றி பேட்டி ஒன்றை கொடுத்திருக்கிறார்.

விஜயகாந்த் - வடிவேலு
பொதுவாக சினிமா துறையில் உள்ள அனைவரும் நடிகர் விஜயகாந்த் மீது பேரன்பு வைத்துள்ளனர். காரணம் அவர் சிறிய தொழில்நுட்ப கலைஞர்கள் உட்பட அனைவரையும் சமமாக நடத்துவார். நடிகர் வடிவேலுவையும் ஆரம்ப காலகட்டத்தில் அப்படித்தான் நடத்தியுள்ளார். சின்ன கவுண்டர் படத்தில் வடிவேலு ஒப்பந்தமான போது, அப்போது முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்த கவுண்டமணி அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பின்னர் விஜயகாந்த் தான் கவுண்டமணியிடம் பேசி சம்மதிக்க வைத்து வடிவேலுவை அதில் நடிக்க வைத்தார். அதன் பின்னர் கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்பட பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து தான் வடிவேலு தனது திறமையை நிரூபித்து இன்று உச்சத்தை அடைந்துள்ளார்

பணமும் புகழும்
இந்நிலையில் பணமும் புகழும் அதிகமாக விஜயகாந்த் வசித்த அதே தெருவில் சொந்த வீடு வாங்கினார் வடிவேலு. ஒருமுறை விஜயகாந்தின் உறவினர் ஒருவர் இறந்தபோது அவரது உறவினர்கள் வடிவேலுவின் வீட்டு முன்பு காரை நிறுத்தியிருக்கிறார்கள். அப்போது காரை எடுக்கும்படி வடிவேலு கெட்ட வார்த்தை பேசியதாகவும், ஒரு கட்டத்தில் விஜயகாந்த் அவர்களை அவரது உறவினர் முன்பு வடிவேலு திட்டியதாகவும் இதனால் கடுப்படைந்த விஜயகாந்தின் உறவினர்கள் மற்றும் அபிமானிகள் வடிவேலுவை அடித்து விட்டதாகவும், அதனை இரவு 3 மணிக்கு தியாகுவிற்கு ஃபோன் பண்ணி வடிவேலு புலம்பியதாகவும் தியாகு அந்த பேட்டியில் கூறியுள்ளார். அந்த தகவலை அப்போது முதலமைச்சராக இருந்த கலைஞருக்கு தகவலை கொடுத்து வடிவேலுவிற்கு பாதுகாப்பு கொடுக்கும்படி தியாகு தான் கூறியிருந்தாராம்

விஜயகாந்த் பெருந்தன்மை
இந்தப் பிரச்சனை நடந்து முடிந்த பிறகு தேர்தலில் விஜயகாந்துக்கு எதிராக பேசுவதாக அவரை தரக்குறைவாக பேசி விமர்சித்திருப்பார் வடிவேலு. அதன் பின்னர் சினிமா துறையில் அவருக்கு பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. காரணம் விஜயகாந்த் மீது திரைத் துறையினர் வைத்திருக்கும் அபிமானம். சமீபத்திய பேட்டிகளில் தனக்கு வாய்ப்புகள் வரவில்லை என்ற மன வருத்தத்தை வடிவேலு தெரிவித்திருந்தார். இது ஒரு புறம் இருக்க வடிவேலுவை நடிக்கச் சொல்லுங்கள் இப்படியே இருக்க வேண்டாம் என்று விஜயகாந்த் தனது அபிமானிகளிடம் சொன்னதாகவும் திரைத் துறையினர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











