வந்தனா மனு-சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி
வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததாக ஸ்ரீகாந்தின் தந்தை கொடுத்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து வந்தனா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
நடிகர் ஸ்ரீகாந்துக்கும் தனக்கும் ரகசிய திருமணம் நடைபெற்றதாகக் கூறி ஸ்ரீகாந்தின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த வந்தனா வெளியேற மறுத்தார். இதனால் ஸ்ரீகாந்த் குடும்பத்தார் தங்கள் வீட்டிற்குள் போகாமல் உறவினரின் வீட்டில் தங்கியுள்ளனர்.வந்தனா தன் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்ததாக ஸ்ரீகாந்தின் தந்தை கிருஷ்ணமாச்சாரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் வந்தனா மீது முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்யுமாறு போலீசாருக்கு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து வந்தனா சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு பரிசீலனைக்கு வந்தபோது, மனுவை விசாரணைக்கு ஏற்காமலேயே நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
வந்தனா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், குற்றவியல் தண்டனைச் சட்டம் 482வது பிரிவின் கீழ், போலீசாருக்கு எப்ஐஆர் பதிவு செய்யும்படி ஹைகோர்ட் உத்தரவிட முடியாது என்றார்.
இதற்கு பதிலளித்த நீதிபதிகள், போலீசார் எப்ஐஆர் பதிவு செய்யாதபோது நீதிமன்றம் வேறு எப்படி உத்தரவிட முடியும். நியாயப்படி பார்த்தால் எப்ஐஆர் பதியாமல், தன் கடமையைச் செய்யாத அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்றனர்.
நீதிபதி அகர்வால் கூறுகையில், எனது சொந்த அனுபவத்திலேயே நான் இப்படிப்பட்ட சம்பவங்களை சந்திக்கும் நிலை ஏற்பட்டது. என் மகள் போலீஸ் நிலையத்தில் சென்று புகார் கொடுத்தபோது, போலீஸ் அதிகாரிகள் 3, 4 மணி நேரம் வரை காலதாமதம செய்து தான் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்திருக்கிறார்கள்.
சுப்ரீம் கோர்ட் நீதிபதிக்கே இப்படிப்பட்ட நிலைமை ஏற்படும்போது, சாதாரண பொது மக்களைப் பற்றி நினைத்து பாருங்கள் என்றார்.


Click it and Unblock the Notifications











