வந்தனாவுக்கு முன்ஜாமீன் தரக் கூடாது:கோர்ட்டில் ஸ்ரீகாந்த் கோரிக்கை
சென்னை:வந்தனாவுக்கு முன்ஜாமீன் தரக் கூடாது என்று கோரி நடிகர் ஸ்ரீகாந்த் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று கோரிக்கை விடப்பட்டது.
தங்களது வீட்டில் அத்துமீறி நுழைந்த வந்தனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி போலீஸில் புகார் கொடுத்திருந்தார் ஸ்ரீகாந்த்தின் தந்தை. பின்னர் இந்தப் புகாரைப் பதிவு செய்து வந்தனா மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்தார்.இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி பாட்ஷா, வந்தனா மீதான புகாரைப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு போலீஸாருக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து வந்தனா சார்பில் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்ரீகாந்த் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வந்தனாவுக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது.
ஸ்ரீகாந்த் ஏற்கனவே முன்ஜாமீன் வழங்கக் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவோடு, வந்தனா மனுவையும் சேர்த்து விசாரிக்க வேண்டும். என்று கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து இரு மனுக்களையும் இன்று பிற்பகல் விசாரிப்பதாக நீதிபதி அறிவித்தார்.
இரு தரப்பும் சமரசமாக போக வேண்டும், பிரச்சினை தொடர்பாக என்ன முடிவு எடுக்கப்பட்டது என்று இன்று பிற்பகலுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நேற்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி வந்தனா மீது சென்னை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர் மீது அத்து மீறி வீட்டுக்குள் நுழைதல், மிரட்டல் ஆகிய இரு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து அவரிடம் இன்று போலீஸார் விசாரணை நடத்தக் கூடும் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியது. இதையடுத்து வந்தனா குடி புகுந்துள்ள ஸ்ரீகாந்த் வீட்டு முன்பு பத்திரிக்கையாளர்கள், புகைப்படக்காரர்கள் குவிந்தனர். பொதுமக்களும் திரளாக கூடியிருந்தனர். ஆனால் ஒரு போலீஸ் கூட வரவில்லை.
போலீஸ் தரப்பில் இதுகுறித்துக் கூறுகையில் கோர்ட் உத்தரவுப்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குடும்பப் பிரச்சினை என்பதால் அவசரப்பட்டு நடவடிக்கையில் இறங்க நாங்கள் விரும்பவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.


Click it and Unblock the Notifications











