வந்தனாவுடன் ஸ்ரீகாந்த்-தடபுடல் விருந்து!
மனக் கசப்பு, தயக்கம், குழப்பம், பதட்டம் நீங்கி, பிரச்சினைகள் முடிவுக்கு வந்துள்ள நிலையில், ஆந்திராவில் வைத்து ரகிசயமாக மணம் புரிந்து கொண்ட தனது மனைவி வந்தனா வீட்டுக்கு நடிகர் ஸ்ரீகாந்த் சென்றார். அவருக்கு ஆரத்தி எடுத்து, கட்டி அணைத்து வரவேற்றார் வந்தனா. ஸ்ரீகாந்த்துக்கு வடை, பாயாசத்துடன் தடபுடலான விருந்தும் அளித்துக் கெளரவித்தனர் வந்தனா குடும்பத்தினர்.
சமீபத்தில் கோலிவுட்டைக் கலக்கிய விவகாரம் வந்தனா - ஸ்ரீகாந்த் மணப் போராட்டம். இந்தப் பிரச்சினை ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது. வந்தனாவை தனது மனைவியாக ஏற்பதாக ஸ்ரீகாந்த் அறிவித்தார். மேலும் வந்தனாவை முறைப்படி தனது வீட்டுக்கு அழைத்து வரப் போவதாகவும், பிரமாண்டமான திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு தனது குடும்பத்தினர் ஏற்பாடு செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார் ஸ்ரீகாந்த்.பிரச்சினைகள் நீங்கிய நிலையில், வந்தனா வீட்டுக்கு நேற்று முதல் முறையாக தனது குடும்பத்துடன் சென்றார் மாப்பிள்ளை ஸ்ரீகாந்த். அவரை வாசலில் ஆரத்தி எடுத்து கட்டி அணைத்து சந்தோஷக் கண்ணீர் மல்க வீட்டுக்குள் அழைத்துச் சென்றார் வந்தனா.
வந்தனாவின் குடும்பத்தார் மற்றும் உறவினர்களும் ஸ்ரீகாந்த்துக்கு ஆரத்தி எடுத்தனர். திருஷ்டிப் பூசணிக்காய் உடைக்கப்பட்டது. வீட்டு வாசலில் தேங்காயும் உடைக்கப்பட்டது.
வீட்டுக்குள் சென்ற ஸ்ரீகாந்த்துக்கு, வடை, பாயாசத்துடன் தடபுடலான விருந்தும் அளிக்கப்பட்டது. அந்த விருந்தை மனைவியுடன் சேர்ந்து ஒரு கை பார்த்தார் ஸ்ரீகாந்த்.
விருந்தை முடித்த பின்னர் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்ட இரு குடும்பத்தினரும், வரவேற்பு நிகழ்ச்சியை எப்படி நடத்துவது, எங்கே நடத்துவது (கல்யாணம் தான் ஏற்கனவே ஆகிப்போச்சே) என்பது குறித்து விரிவாகப் பேசினார்களாம்.
அடுத்த மாதம் சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாம்.


Click it and Unblock the Notifications











