வசந்தபாலனின் அங்காடி தெரு

டைரக்டர் ஷங்கர் தயாரிப்பில் வசந்தபாலன் இயக்கிய வெயில் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்தப் படத்திற்கு பின்னர் வசந்தபாலன் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார்.
அங்காடி தெரு என்ற பெயரில் தயாரிக்கப்படும் படத்தை அவரே இயக்கப் போகிறாராம். படத்தில் நடிக்கும் ஹீரோ, ஹீரோயின் உட்பட அனைத்து நடிகர்களும் நெல்லை, தூத்துக்குடி வட்டாரங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார்களாம்.
இதற்காக வசந்தபாலன் மற்றும் அவருடைய யூனிட்டை சேர்ந்த உதவி இயக்குனர்கள் திருநெல்வேலியில் முகாமிட்டுள்ளனராம்.
வடநாட்டு நடிகைகள் பின்னால் கோலிவுட் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை நடிக்க தேர்ந்தெடுக்க காரணம் என்ன என்று வசந்த பாலனிடம் கேட்டதற்கு,
விருதுநகர் மக்களை மையமாக வைத்து வெயில் படத்தை இயக்கினேன். அந்தப்படம் பெரிய வெற்றியை பெற்று பல விருதுகளும் கிடைத்தது. அதே போல் நெல்லை மக்களின் காதலை மையமாக வைத்து அங்காடி தெரு என்ற புதிய படத்தை இயக்குகிறேன்.
நிச்சயம் இந்தப் படத்திற்கும் சென்னையிலோ அல்லது பிற இடங்களிலோ அழகான நடிகர்-நடிகையர்களை தேர்வு செய்ய முடியும். ஆனால் படத்தின் கதைக்கேற்ப அந்த ஊரைச் சேர்ந்தவர்களை தேர்ந்தெடுத்தால் படத்தின் கதை நேர்த்தியாக அமையும் என்பதற்காகத்தான் இங்கு வந்து தேர்வு செய்கிறேன் என்றார்.
கடந்த இரு தினங்களில் மட்டும் ஏராளமானோர் வசந்தபாலனை சந்தித்து வாய்ப்பு கேட்டுள்ளனராம்.


Click it and Unblock the Notifications











