'நெட்டி'ல் வேகம் - எஸ்.வி.சேகரின் விவேகம்!
இந்திய சினிமா வரலாற்றிலேயே முதல் முறையாக, திரைக்கு வந்த சில நாட்களிலேயே இன்டர்நெட்டிலும் ஒரு படம் ரிலீஸாகியுள்ளது. அந்தப் பெருமைக்குரிய படம் வேகம். வெளியிட்டுள்ளவர் படத்தைத் தயாரித்த நடிகர் எஸ்.வி.சேகர்.
| Click here for more images |
உலகம் முழுவதும் ஒரு புதுமொழி உலா வந்து கொண்டுள்ளது. உலகில் உள்ள மொழிகளில் எவையெல்லாம் இன்டெர்நெட்டிலும் 'சர்வைவ்' ஆகிறதோ, அதுதான் எதிர்காலத்தில் பிழைக்கும், மற்றவை அழியும் என்பதுதான் அது.
அந்த அளவுக்கு உலகின் எதிர்கால பவர்ஃபுல் மீடியாவாக இன்டர்நெட் மாறிக் கொண்டிருக்கிறது. அதை சரியாகப் புரிந்து கொண்டவர்கள், 'சக்சஸ்ஃபுல்லாக' நெட்டிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இருந்தாலும் தமிழ் சினிமாவில் இன்டர்நெட் என்றாலே சிலருக்கு வேப்பங்காயாக கசக்கிறது. என்ன காரணமோ தெரியவில்லை.
சமீபத்தில் கூட சிவாஜி படத்தின் பாடல்களும், படக் காட்சிகளும் படம் ரிலீஸாவதற்கு முன்பே நெட்டில் வெளியாகி உலகையே கலக்கியது. படத்தின் ஆடியோ கேசட்டுகள் சூப்பர் ஹிட்டாக விற்றதற்கும், படம் சூப்பர் ஹிட்டாக எதிர்பார்க்கப்பட்டதற்கும், நெட்டில் அப்பாடல்கள், முன்கூட்டியே வெளியானதுதான் முக்கியக் காரணம்.
இந்த நிலையில் இன்டர்நெட்டின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அங்கீகரித்து நடிகர் எஸ்.வி.சேகர் புத்திசாலித்தனமான ஒரு காரியத்தை செய்துள்ளார். தனது மகன் அஷ்வின் சேகர் நடித்த அறிமுகப்படமான வேகம் படத்தை இன்டர்நெட்டிலும் தற்போது ரிலீஸ் செய்துள்ளார்.
தியேட்டர்களுக்கு வந்த சில நாட்களிலேயே இப்படத்தை அவர் நெட்டுக்குக் கொண்டு வந்திருப்பது உண்மையிலேயே மிகவும் தைரியமான விஷயம்.
வேகம் படத்தில் அஷ்வினுக்கு ஜோடியாக அர்ச்சனா நடித்திருந்தார். பிரபு, குஷ்பு, எஸ்.வி.சேகர் ஆகியோரும் நடித்துள்ளனர். படத்திற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது.
தற்போது உலகெங்கும் இன்டர்நெட்டில் வேகம், வேகமாக உலா வந்து கொண்டுள்ளது. படத்தின் பெரும்பகுதி மலேசியாவில்தான் படமாக்கப்பட்டது. ராஜேஷ் வைத்யா இசையமைத்திருந்தார்.
இதுகுறித்து எஸ்.வி.சேகர் கூறுகையில், வேகம் படத்தை நெட்டில் வெளியிட்டுள்ள முதல் தயாரிப்பாளர் (தைரியமான தயாரிப்பாளர்) நான்தான். இன்டர்ந்நெட், உலகின் தவிர்க்க முடியாத மீடியாவாக மாறியுள்ளதே படத்தை நெட்டில் நான் வெளியிட முக்கியக் காரணம் என்றார்.
படத்தில் ஈவென்ட் மானேஜ்மென்ட் நிறுவனத்தை நடத்தும் இளைஞராக வருகிறார் அஷ்வின். வெளிநாட்டுக்கு வரும் அவர் குஷ்புவை சந்திக்கிறார். குஷ்பு ஒரு பிரச்சினையில் சிக்கிக் கொண்டிருக்கிறார். அவரை அஷ்வின் மீட்கிறார். அவருக்கு போலீஸ் அதிகாரியான பிரபு உதவுகிறார். இறுதியில் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.
வேகத்தைக் கொடுத்த எஸ்.வி.சேகர், விவேகமானவரும் கூட!


Click it and Unblock the Notifications











