twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வெற்றிக் களிப்பில் வெங்கட் பிரபு

    By Staff
    |

    பின்னணிப் பாடகராக வர முயன்று அது முடியாமல் இப்போது வெற்றிப் பட இயக்குநர் என்ற புதிய பெருமையை அடைந்துள்ளார் வெங்கட் பிரபு.

    இசைஞானி இளையராஜாவின் இளவல் கங்கை அமரனின் மகன்தான் வெங்கட் பிரபு. கொஞ்ச காலத்திற்கு முன்பு வரை இவரைப் பாடகராகத்தான் நிறைய பேருக்குத் தெரிந்திருந்தது. பின்னர் நடிப்பில் இறங்கினார். இரண்டு துறையிலும் பிரபுவுக்கு பெரும் பெயர் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் இப்போது இயக்குநராக அவதாரம் எடுத்து சக்ஸஸ் செய்துள்ளார் பிரபு. தனது பெயரையும் வெங்கட் ஜி. பிரபு எனவும் மாற்றிக் கொண்டிருக்கிறார்.

    லண்டன் டிரினிட்டி இசைக் கல்லூரியில் இசையில் பட்டம் பெற்றவர் பிரபு. பெரியப்பா இளையராஜா போல மிகப் பெரிய இசையமைப்பாளராக வேண்டும் என்ற தாகத்தில் இருந்தவர். ராஜா, கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா ஆகியோரது இசையில் சில பாடல்களையும் பாடியுள்ளார்.

    ஆனால் அது சரிப்பட்டு வரவில்லை. இதையடுத்து நடிக்க ஆரம்பித்தார். இதற்காக பூஞ்சோலை என்ற படத்தை கங்கை அமரன் இயக்கினார். அதில் ரசிகாதான் (அதாவது உயிர் சங்கீதா) நாயகி. இதுதான் அவரது முதல் படமும் கூட. இளையராஜா இப்படத்துக்கு இசையமைத்திருந்தார்.

    படம் சரியாகப் போகவில்லை. வெங்கட் பிரபுவின் நடிப்புக் கனவு இதனால் தேக்கமடைந்தது. பின்னணிப் பாடகராகவும் ஜொலிக்க முடியவில்லை, நடிகராவும் தேற முடியவில்லை என்ற போதிலும் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற வெறியுடன் இருந்தார் வெங்கட் பிரபு.

    அந்த வெறியை நெறிப்படுத்தி கை கொடுக்க முன்வந்தார் நண்பர் எஸ்.பி.பி.சரண். பிரபுவுக்குள் ஒளிந்திருந்த இயக்குநரை அவருக்கு அடையாளம் காட்டி இதில் புகுந்தால் புயலைக் கிளப்பலாம் என அவர் ஊக்கம் கொடுக்க, உருவானது சென்னை 600028 கதை.

    சரண்தான் இப்படத்தின் தயாரிப்பாளர். யாருக்குமே அதிகம் தெரியாத சில இளைஞர்கள்தான் இப்படத்தின் நாயகர்கள். தெரு கிரிக்கெட்தான் கதைக் களம். வித்தியாசமான கதையுடன் கிளப்பலாக படத்தை எடுத்து இப்போது பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார் பிரபு.

    திரையிட்ட இடங்களில் எல்லாம் படம் சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறது. முக்கியமாக ஏ,பி, சி என அனைத்து சென்டர்களிலும் படம் சக்ஸஸ் ஆகியிருக்கிறது. இதனால் வெங்கட் பிரபு படு சந்தோஷமாக உள்ளார். அவரை விட அவரது அப்பா கங்கை அமரன்தான் படா சந்தோஷமாக உள்ளாராம்.

    இப்போது பெரிய பெரிய பேனர்கள் எல்லாம் வெங்கட் பிரபுவைத் தேடி வர ஆரம்பித்துள்ளனராம். அதில் முக்கியமான ஒரு நபர் விஷால். தற்போது நடிக்கப் போகும் மலைக்கோட்டை படத்துக்குப் பின்னர் தன்னை வைத்து ஒரு படத்தை இயக்க வேண்டும் என்று அன்பாக கட்டளை இட்டுள்ளாராம் விஷால்.

    வெற்றிப் படிகளில் கால் எடுத்து வைத்துள்ள வெங்கட் பிரபு, இந்த சந்தோஷ டர்னிங் பாயிண்ட் குறித்து என்ன நினைக்கிறார் என்று கேட்டபோது, ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன். எனது மகிழ்ச்சியை வெளிப்படுத்த பொருத்தமான வார்த்தை எனக்குத் தெரியவில்லை.

    எனது நண்பன் சரணுக்கு முதலில் நன்றி சொல்லிக் கொள்கிறேன். எனது சிறந்த நண்பர்களில் ஒருவரான விஷால் உள்ளிட்ட பலரும் என்னைப் பாராட்டியுள்ளனர். விஷால் தனக்காக ஒரு படம் செய்து தர வேண்டும் என அன்புக் கட்டளையே இட்டுள்ளார். என்னை வைத்து சரணும் இன்னொரு படம் இயக்க ஆர்வமாக உள்ளார்.

    படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் என்ற செய்தியைக் கேள்விப்பட்டதும் அப்பா கங்கை அமரன் மிகவும் நிம்மதியாக, ரிலாக்ஸ்டாக மாறியுள்ளார் என்று சந்தோஷமாக பேசிக் கொண்டு சென்றார் பிரபு.

    இதற்கிடையே இப்படத்தை ஹைதராபாத் கல்லி என்ற பெயரில் தெலுங்கில் டப் செய்யவுள்ளனராம். தெலுங்குப் பதிப்புக்காக சில காட்சிகளை சமீபத்தில் ஹைதராபாத் சென்று படமாக்கினாராம் பிரபு.

    தொடர்ந்து வெல்லுங்க வெங்கட்!

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X