பிரேம்ஜி இயக்கத்தில் வெங்கட் பிரபு கதாநாயகன்...கார்த்திக் ராஜாவிற்கும் இயக்குநர் ஆசை இருந்தது தெரியுமா?
சென்னை: மாநாடு திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து இயக்குநர் வெங்கட் பிரபு தற்சமயம் தெலுங்கு திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.
நாகார்ஜுன் மகன் நாக சைதன்யா அதில் கதாநாயகனாக நடிக்க, இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா சேர்ந்து இசையமைக்கிறார்கள்.
இந்நிலையில் தன் சினிமா வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான விஷயங்களை வெங்கட் பிரபு ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்

லண்டன் படிப்பு
பத்தாவது முடித்த உடனேயே வெங்கட் பிரபு லண்டனுக்கு படிக்கச் சென்று விட்டாராம். அங்கிருந்த காலக்கட்டத்தில்தான் தன்னுடைய அப்பா மற்றும் பெரியப்பா அவர்களின் பெருமையையும் எவ்வளவு பெரிய குடும்பத்திலிருந்து தான் வந்துள்ளேன் என்பதையும் உணர்ந்தாராம். அங்கு அக்கவுண்ட்ஸ் படித்து முடித்த பிறகு சிங்கப்பூரில் ஒரு வங்கியில் வேலை, லண்டனில் ஒரு நிறுவனத்தை கவனிக்க வேண்டிய பொறுப்பு என்று கிடைத்த வாய்ப்புகளை தவிர்த்துவிட்டு சினிமாவில் எதையாவது செய்ய வேண்டும் என்று இந்தியா வந்துள்ளார். இங்கு 90-களில் ஆங்கில இதழ் ஒன்றையும் நடத்தியுள்ளார்.

நெக்ஸ்ட் ஜெனரேஷன்
இந்தியா வந்ததும் எஸ்.பி.பி அவர்களுடைய மகன் சரண் மற்றும் மலேசியா வாசுதேவன் அவர்களுடைய மகன் யுகேந்திரனுடன் சேர்ந்து நெக்ஸ்ட் ஜெனரேஷன் என்கிற இசை குழுவை மூவரும் நடத்தியுள்ளார்கள். அதில் இசையமைப்பாளர் தமன் டிரம்ஸ் வாசிப்பாராம். ஸ்ரீகாந்த் தேவா மற்றும் தேவி ஸ்ரீ பிரசாத் அந்தக் குழுவில் வந்து பாடியுள்ளார்களாம்.

இயக்குநர் பிரேம்ஜி
இளையராஜா அவர்களின் மூத்த மகன் கார்த்திக் ராஜாவிற்கு டைரக்ட் செய்வதில் ஆர்வம் அதிகமாம். 90-களிலேயே நிறைய குறும்படங்கள் எடுத்துள்ள கார்த்திக் ராஜாவின் அனைத்து கதைகளிலும் வெங்கட் பிரபுதான் கதாநாயகனாம். யுவன் சங்கர் ராஜா, பிரேம்ஜி உள்ளிட்ட அனைவரும் அதில் நடித்துள்ளதாக கூறிய வெங்கட் பிரபு அவரிடம் இருந்துதான் பிரேம்ஜிக்கு டைரக்ட் செய்யும் ஆசை வந்ததாகவும் "வாண்டட்" என்கிற திரைப்படத்தை வெங்கட் பிரபுவை கதாநாயகனாக வைத்து துவங்கியதாகவும் பின்னர் அந்தப் படம் கைவிடப்பட்டதாகவும் கூறியிருக்கிறார்.

சென்னை 28
ஏப்ரல் மாதத்தில், ஜி, சிவகாசி போன்ற படங்களில் நடித்தபொழுது சரணிடம் ஒரு சில கதைகளை வெங்கட் பிரபு கூறுவாராம். சரண்தான் தனக்கு இயக்குநர் ஆகும் ஊக்கத்தை கொடுத்தாராம். சரண் தயாரித்த மழை திரைப்படம் மிகப்பெரிய தோல்வியடைந்ததால், அப்போது வெங்கட் பிரபு உருவாக்கி இருந்த ஒரு பெரிய கதையை கைவிட்டு சிறிய பட்ஜெட்டில் சென்னை 28-ஐ ஆரம்பித்துள்ளார்கள். அடிப்படையில் தான் ஒரு நகைச்சுவையான நபர் என்பதால் நகைச்சுவையான கதைக்களத்தை தேர்வு செய்யும்படி பலரும் ஆலோசனை கூறியதாக வெங்கட் பிரபு பல சுவாரசியமான நிகழ்வுகளை கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











