தனுஷையும் சிம்புவையும் ஒரே படத்தில் இயக்க நினைத்த வெற்றிமாறன்... ஆனால் நடிக்க மறுத்த தனுஷ்
சென்னை: விடுதலை திரைப்படத்தை விறுவிறுப்பாக எடுத்துக் கொண்டிருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன்.
அடுத்ததாக நடிகர் சூர்யாவை வைத்து வாடிவாசல் திரைப்படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கவிருக்கிறார்.
இந்நிலையில வெற்றிமாறன் இயக்கத்தில் தான் நடிக்க மறுத்த சம்பவம் ஒன்றை தனுஷ் முன்னதாக கூறியுள்ளது தற்சமயம் பிரபலமாகியுள்ளது.

தனுஷ் வெற்றிமாறன் கூட்டணி
தன்னுடைய பொல்லாதவன் திரைப்படம் மூலம் வெற்றிமாறனை இயக்குனராக அறிமுகம் செய்தார் தனுஷ். அந்தப் படம் துவங்கும் போது இரண்டு படங்கள் எடுக்கலாம். முதல் படம் தோல்வி அடைந்தாலும் இரண்டாவது படத்தை அது பாதிக்காது என்று பேசிதான் துவங்கினார்களாம். ஆரம்பத்தில் நெடுஞ்சாலை திரைப்படத்தை துவங்கி அந்தக் கதையை கைவிட்டு அதன் பின்னர் உருவான திரைப்படம்தான் பொல்லாதவன். தனுஷின் சினிமா வாழ்க்கையில் முக்கியமான திரைப்படமாக அது அமைந்தது. காரணம், அவரது நடிப்பில் முதிர்ச்சி தெரிந்தது அந்தப் படத்திலிருந்துதான்.

வெற்றிக் கூட்டணி
அதன் பின்னர் ஆடுகளம், வடசென்னை, அசுரன் போன்ற வெற்றி திரைப்படங்களில் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணி பயணம் செய்தது. இயக்கம் நடிப்பு என்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் இருவரும் சேர்ந்து படங்களையும் தயாரித்தனர். காக்கா முட்டை, விசாரனை, வட சென்னை உள்ளிட்ட திரைப்படங்களை இருவரும் சேர்ந்து தயாரித்து அதிலும் பெயர் பெற்றனர். வசூல் ரீதியாக மட்டுமில்லாமல் விமர்சன ரீதியாகவும் பாராட்டப்பட்டு பல விருதுகளையும் குவித்துள்ளது இவர்களுடைய திரைப்படம்.

முன்னணி இயக்குநர்
இன்று தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் இயக்குநராக விளங்குபவர் வெற்றிமாறன்தான் என்று தயாரிப்பாளர் தாணு கூறியுள்ளார். அசுரன் திரைப்படத்தை ஹிந்தியில் இயக்குவதற்கு நிறைய கதாநாயகர்கள் கேட்டும், அவர் ஒரே படத்தை மீண்டும் எடுக்க விருப்பம் இல்லை என்று மறுத்துவிட்டார். அதேபோல தெலுங்கு நடிகர்கள் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆரும் அவருடன் பணியாற்ற விரும்புவதாக தாணு கூறியுள்ளார்.

சிம்பு கூட்டணி
பொல்லாதவன் திரைப்படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் வடசென்னை திரைப்படத்தை நடிகர் சிம்புவை வைத்து இயக்கப் போவதாக தனுஷிடம் கூறியிருந்தார். அந்தக் காலகட்டத்தில் நடிகர் சிம்புவுடன் பல நிகழ்ச்சிகளில் வெற்றிமாறன் கலந்து கொண்டார். வட சென்னை படத்தில் இருக்கும் ராஜன் கதாபாத்திரத்திற்கு முதலில் குமார் என்ற பெயர்தான் இருந்ததாம். 40 நிமிடங்கள் வரக்கூடிய அந்தக் கதாபாத்திரத்தில் நீங்கள் நடிக்கிறீர்களா என்று தனுஷிடம் கேட்டாராம் வெற்றிமாறன். அதற்கு,"எனக்கு பெருந்தன்மை இருக்கு சார், ஆனா அவ்வளவு பெரிய பெருந்தன்மை இல்லை" என்று தன்மையாக கூறி அப்போது வட சென்னையில் நடிக்க மறுத்துவிட்டாராம் தனுஷ்.


Click it and Unblock the Notifications











