யானை முதல் குதிரை வரை.. ‘வாரிசு’ விஜய்யை இந்த 2022ல் சுற்றிய சர்ச்சைகள்!
சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் குறித்து ஒவ்வொரு ஆண்டும் ஏகப்பட்ட சர்ச்சைகள் வெளியாவது வழக்கம் தான்.
விஜய்யின் புதிய படங்கள் ரிலீஸ் சமயத்தில் சர்ச்சைகளை தாண்டி பிரச்சனைகளும், சிக்கல்களும் வரும்.
இந்த ஆண்டு சற்று அதிகமாகவே யானை முதல் குதிரை சர்ச்சை வரை நடிகர் விஜய்யை சுற்றி வரும் நிலையில், அது குறித்து ஒரு சின்ன ரவுண்டப் இங்கே பார்ப்போம்..

வாரிசு காட்சிகள் லீக்
விஜய் பட ஷூட்டிங் நடக்கிறது என்றாலே எப்படி இருந்தாலும் ரசிகர்கள் அதனை செல்போன் மூலம் வீடியோ எடுத்து விட வேண்டும் என்கிற ஆவலில் வலம் வருகின்றனர். ஆனால், ஷூட்டிங் ஸ்பாட்டில் பணியாற்றும் சிலரே இந்த ஆண்டு ஏகப்பட்ட வாரிசு படத்தின் காட்சிகளை வீடியோக்களாக எடுத்து லீக் செய்தது படக்குழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

தியேட்டர் சர்ச்சை
அஜித்தின் துணிவு படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது என்பது உறுதியானதும் நடிகர் விஜய்யின் வாரிசு படத்துக்கு குறைவான தியேட்டர்களே கிடைக்கும் என்று பெரிய பஞ்சாயத்து ஓடியது. ஆனால், இரு படங்களுக்கு சமமான தியேட்டர்கள் தான் ஒதுக்கப்படும் என உதயநிதி தரப்பில் கூறப்பட்டது. அவதார் படத்தை வாங்க வேண்டும் என்றால் துணிவு படத்தை போட்டால் தான் கொடுப்போம் என இன்னொரு சர்ச்சையும் வெடித்தது.

தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம்
நம்ம ஊரில் பொங்கல் பண்டிகை என்றால் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் சங்கராந்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது. சங்கராந்தியை முன்னிட்டு விஜய்யின் வாரிசு படம் வெளியாக உள்ள நிலையில், அந்த படத்துக்கு முன்னுரிமை கொடுக்கப்படாது என்றும் பவன் கல்யாண் மற்றும் பாலகிருஷ்ணா படங்களுக்குத்தான் தியேட்டர்கள் ஒதுக்கப்படும் என்கிற சர்ச்சையும் கிளம்பின. சீமான் உள்ளிட்ட பிரபலங்கள் அதற்கு கண்டனம் தெரிவித்தனர். ஆனால், அதற்கு வாய்ப்பே இல்லை என்றும் தயாரிப்பாளர் தில் ராஜு சரி சமமாக டோலிவுட்டிலும் வாரிசு படத்திற்கு தியேட்டர்களை பிடித்து விடுவார் என்று அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

அனுமதியில்லாமல் 5 யானை
வாரிசு படத்தின் கிளைமேக்ஸ் காட்சி பூந்தமல்லியை அடுத்த இவிபி பிலிம் சிட்டியில் படமாக்கிய போது அனுமதியில்லாமல் 5 யானைகள் பயன்படுத்தப்பட்டதாகவும், அதை கண்டுபிடிக்க சென்ற பத்திரிகையாளர்களை விஜய் மக்கள் இயக்கத்தினர் மற்றும் அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கியதாகவும் வழக்கு ஒன்றும் பதிவானது. விலங்குகள் நல ஆணையம் இதற்கான விளக்கம் கேட்டு வாரிசு படக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த காட்சி படத்தில் இடம்பெறுமா? அல்லது அதை நீக்கி விட்டு வேறு ஒரு காட்சி இடம்பெறுமா? என்கிற குழப்பங்கள் இன்னமும் நிலவி வருகின்றன.

பிரியாணி விருந்து
துணிவு படத்துடன் மோத உள்ள நிலையில், நடிகர் விஜய் தனது ரசிகர்களை ஒன்று திரட்டத்தான் பனையூரில் பிரியாணி விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார் என்றும் அரசியலிலும் அவர் களம் காண போவதாகவும் விஜய் தனது மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்த நிகழ்வும் பரபரப்பாக பேசப்பட்டது. மேலும், நடிகர் விஜய்யின் கார் கண்ணாடியில் ஒட்டப்பட்டிருந்த கருப்பு ஃபிலிம் காரணமாக 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

நடிகைகளை குதிரைன்னு சொன்னாரா
இப்படி ஏகப்பட்ட சர்ச்சைகள் நடிகர் விஜய்யை சுற்றி இந்த ஆண்டு மட்டும் வெடித்துள்ள நிலையில், கடைசியாக வாரிசு பட நடிகர் ஷாம் அளித்த பேட்டி சோஷியல் மீடியாவில் புதிய பூகம்பத்தையே கிளப்பி உள்ளது. ஆஃப் ஸ்க்ரீனில் ஷாமிடம் வரும்போதே ரெண்டு குதிரைங்க சிம்ரன், ஜோதிகான்னு வர.. யாருடா நீ என கேட்டார் என ஷாம் கூறிய பேட்டியை நெட்டிசன்கள் ஷேர் செய்து விஜய்யை விளாசி வருகின்றனர். இன்னும் ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சியில் என்ன என்ன பிரச்சனைகள் கிளம்புமோ தெரியவில்லை.


Click it and Unblock the Notifications











