Don't Miss!
- Finance கச்சா எண்ணெய் விலை தடாலடி உயர்வு.. பணவீக்கத்திற்கு வேட்டு, ரெப்போ விகிதம் குறைவது கடினம்..!!
- News கடையில் கைவரிசை! ரூ.13,000க்காக இந்தியாவின் மானத்தை வாங்கிய மாணவிகள்.. அமெரிக்க போலீஸ் கொடுத்த ஷாக்
- Lifestyle மனித இரத்தத்தை விரும்பி சுவைக்கும் ஆபத்தான பாக்டீரியா: ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி...!
- Automobiles இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தமிழகம், புதுவை தவிர்த்து பிற இடங்களில் இன்று விஸ்வரூபம் ரிலீஸ்
சென்னை: தமிழகத்திலும், புதுவையிலும் தடை விதிக்கப்பட்டுள்ளதால், இந்த இரு மாநிலங்களைத் தவிர பிற மாநிலங்களிலும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் இன்று கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படம் ரிலீசானது.
ஏற்கனவே மலேசியாவின் பல பகுதிகளில் இப்படம் நேற்றே வெளியாகி விட்டது. அதேசமயம், அமெரிக்கா உள்ளிட்ட பிற பகுதிகளில் இன்று வெளியாகிறது.
கமல்ஹாசன் இயக்கி, நடித்து, தயாரித்துள்ள படம் விஸ்வரூபம். இப்படம் ஆரம்பத்தில் தயாரிப்புப் பிரச்சினையை சந்தித்தது. பின்னர் அதிலிருந்து மீண்டபோது வெளியீட்டில் பிரச்சினையை சந்தித்தது.
டிடிஎச் பிரச்சினை
டிடிஎச்சில் நேரடியாக படத்தைத் திரையிடப் போவதாக கமல்ஹாசன் அறிவித்தபோது அனைவரும் அதிர்ந்தனர், பின்னர் அவரது திட்டம் புரிந்து வியந்தனர். ஆனால் தியேட்டர் உரி்மையாளர்களும், விநியோகஸ்தர்களும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
புறக்கணிப்போம் என மிரட்டல்
கமல்ஹாசன் டிடிஎச்சில் படத்தை முதலில் வெளியிட்டால் அவரையும், அவரது படங்களையும் புறக்கணிப்போம் என்று தியேட்டர்உரிமையாளர்கள் மிரட்டினர். ஆனால் கமல்ஹாசனுக்கு ஆதரவாக தயாரிப்பாளர்கள் திரண்டனர்.
இறங்கி வந்தார் கமல்
இருப்பினும் கமல்ஹாசனுடன் சமரசமாகப் போக தியேட்டர் உரிமையாளர்கள் முடிவு செய்து பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டனர். இந்தப் பேச்சுவார்த்தையின் விளைவாகவும், கமல்ஹாசனுக்கு மூத்தவர்கள் சிலர் கொடுத்த ஆலோசனையின் காரணமாகவும் அவர் டிடிஎச்சில் முதலில் திரையிடுவதை நிறுத்தி வைக்க தீர்மானித்தார்.
கிளம்பியது மதப் பிரச்சினை
இந்தப் பிரச்சினை ஒரு வழியாக தீர்ந்த நிலையில் அடுத்துவந்தது மிகப் பெரிய பிரச்சினை. அது மதப் பிரச்சினை. இஸ்லாமை மிகவும் இழிவுபடுத்தும் வகையில் படம் இருப்பதாக இஸ்லாமிய அமைப்புகள் கருத்து தெரிவித்தன. படத்தைத் தங்களுக்குக் காட்ட வேண்டும் என்று்ம் அவை கோரிக்கை விடுத்தன.
படம் பார்த்த பின்னர் கொந்தளிப்பு
இதையடுத்து இஸ்லாமிய அமைப்பினருக்காக படத்தை பிரத்யேகமாகப் போட்டுக் காட்டினார் கமல்ஹாசன். படத்தைப் பார்த்த பி்ன்னர் இதுவரை இப்படி இஸ்லாமை மோசமாக சித்தரித்த படத்தை தாங்கள் பார்த்ததே இல்லை. இந்தப் படம் வெளியே வரவே கூடாது, இதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று இஸ்லாமிய அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக அரசு தடை
இஸ்லாமிய அமைப்புகள் அத்தோடு நில்லாமல் போராட்டத்திலும் குதித்தன. மேலும் படத்தைத் திரையிட கூடாது, தடை விதிக்க வேண்டும் என்று தமிழக உள்துறை செயலாளர், காவல்துறை தலைவர் உள்ளிட்டோரிடம் புகார்களைக் கொடுத்தனர். இதைப் பரிசீலித்த தமிழக அரசு சட்டம் ஒழுங்கைக் காரணம் காட்டி 2 வாரங்களுக்குப் படத்தைத் திரையிட தடை விதித்தது.
உயர்நீதிமன்றத்தை நாடிய கமல்
தமிழக அரசின் தடையால் நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று முழுக்க விஸ்வரூபம் பற்றித்தான் எங்கு பார்த்தாலும் பேச்சாக இருந்தது. தமிழக அரசின் தடையை எதிர்த்து கமல்ஹாசன் உயர்நீதி்மன்றத்தை நாடினார். அங்கு வழக்கை விசாரித்த நீதிபதி, 28ம் தேதி வரை தடை தொடரும் என்றும், 26ம் தேதி படத்தைப் பார்த்த பின்னர் தடை குறித்து முடிவுக்கு வரலாம் என்றும் அறிவித்தார்.
உலகம் முழுவதும் இன்று ரிலீஸ்
இப்படிப்பட்ட பரபரப்பான பின்னணியில் இன்று உலகம் முழுவதும் விஸ்வரூபம் ரிலீஸானது. தமிழகத்திலும், தமிழகத்தைப் போலவே தடை விதிக்கப்பட்டுள்ள புதுச்சேரியிலும் மட்டும் படம் வெளியாகவில்லை.
பெரும் ஆர்வத்தில் ரசிகர்கள்
இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய பரபரப்பில் இப்படம் சிக்கியுள்ளதால், படத்தைப் பார்க்க ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்துள்ளனர். கமல்ஹாசன் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அத்தனை தரப்பினரும் இப்படத்தில் அப்படி என்னதான் உள்ளது என்ற ஆர்வத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
தமிழ், தெலுங்கு, இந்தியில்
இப்படத்தை தமிழ், தெலுங்கு, இந்தியில் கமல்ஹாசன் தயாரித்து, இயக்கி நடித்துள்ளார். மூன்று மொழிகளிலும் இப்படம் இன்று திரைக்கு வருகிறது.